கம்பேக் தந்த வீரர்கள்
இந்த முறை குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ், விருதிமான் சாஹா, தினேஷ் கார்த்திக் என பலரும் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளனர். இவர்களில் இருந்து இந்திய அணிக்கு யார் யார் செல்வார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் சத்தமே இல்லாமல் ஒரு வீரரை பிசிசிஐ உறுதி செய்துவிட்டது.
யார் அந்த வீரர்
ஐதராபாத் அணியின் வேக புயல் உம்ரான் மாலிக் தான் அது. கடந்த சீசனில் வெறும் வேகம் மட்டும் தான் உள்ளது என ஓரம்கட்டபட்ட அவர், இந்தாண்டு டேல் ஸ்டெய்னின் பயிற்சியில் பக்கா பவுலராக உருவெடுத்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு பந்தையும் 150+ கிமீ வேகத்தில் தான் வீசுகிறார். இதனால் அனைத்து பேட்ஸ்மேன்களும் நிலை தடுமாறி சரிகின்றனர்.
வியக்கவைக்கும் யார்க்கர்
கடைசியாக விருதிமான் சாஹாவுக்கு எதிராக அவர் வீசிய பந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 152.8 கிமீ வேகத்தில் துள்ளியமான யார்க்கர் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதுமட்டுமல்லாமல் 5 விக்கெட்கள் எடுத்து அந்த போட்டியில் அசத்தினார். நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் 15 விக்கெட்களை சாய்த்துள்ளார்.
அதிகாரியின் பதில்
இவர் குறித்து பேசிய தேர்வுக்குழு அதிகாரி ஒருவர், 150+ கிமீ வேகத்தில் வீசும் பவுலரை வேண்டாம் என சொல்வார்களா?.. அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நிச்சயம் அவரை இந்திய அணியில் எடுத்து முழுமையாக தயார் செய்வோம் எனக்கூறியுள்ளார். இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதில் உம்ரான் மாலிக் இடம் பிடிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.
உலகக்கோப்பை அணி
டி20 உலகக்கோப்பையில் இருப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், உலகக்கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளது. அதற்காக பல பவுலர்கள் மோதி வருகின்றனர். ஐபிஎல்-ஐ வைத்து உம்ரான் மாலிக் இடம்பிடிப்பாரா என்று கேட்டால் சிறுபுள்ளைதனமாக இருக்கும். அவர் ஒவ்வொரு படியாக தான் ஏறி வர வேண்டும். ஏறி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.