ஐபிஎல் போட்டிகள்
ஆனால் இந்த முறையும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே "ப்ளான் பி" என்னவென்பது குறித்து பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. வழக்கம் போல அமீரகத்திற்கு செல்வது தான் முதன்மை தேர்வாக இருந்தது.
புதிய நாடு தேர்வு
இந்நிலையில் அதில் தான் ட்விஸ்ட் வைத்துள்ளது பிசிசிஐ. இந்த முறை முழு ஐபிஎல் போட்டிகளையும் தென்னாப்பிரிக்க நாட்டில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமீரகத்தை எதிர்நோக்கி இருந்தால் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பதால் இந்த முறை மாற்றம் ஏற்படுத்த முயற்சித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அமீரகத்தை விட தென்னாப்பிரிக்காவில் கூடுதல் பாதுகாப்பும், வீரர்களின் மனநிலையும் சீராக இருக்கும் எனத் தெரிகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு அங்கு, காடுகளுக்கு மத்தியில் அரை ஏக்கருக்கும் மேல் கொண்ட ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கையான சூழல், குளம், குட்டைகள் என வீரர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்திய வீரர்களும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி கூறியுள்ளதால் பிசிசிஐ முழுமையாக நம்பிக்கை வைத்துவிட்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி
ஒருவேளை இந்திய அணி விருப்பம் தெரிவித்தால், அதனை ஏற்கும் சூழலில் தான் தென்னாப்பிரிக்க வாரியம் உள்ளது. ஏனென்றால் கொரோனாவால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. அதனை சீர் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே ஐபிஎல் போட்டிகள் மூலம் பெறும் வருமானம் உதவியாக இருக்கும் என்பதால் நிச்சயம் ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல அமீரகத்தை விட தென்னாப்பிரிக்காவில் நடத்துவதற்கு செலவுகள் குறைவாக தான் இருக்கும்.