மெகா ஏலம்
ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 2022ம் ஆண்டு ஐபிஎல் முதல் 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட தொடராக மாறவிருக்கிறது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
2 புதிய அணி
ஆனால் 2 புதிய அணிகளை வாங்குவதற்கு பிரபல தொழிலதிபர்களிடையே கடும் போட்டிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிசிசிஐ-க்கு பல கோடிகள் கொடுக்கவும் தயார் என முன் வருவதாக தெரிகிறது. இந்நிலையில் 2 அணிகளை வாங்குவதற்கான வழிமுறைகளை பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ஏலத்தொகை
அதன்படி புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு ஏலத்தின் ஆரம்பத் தொகையாக ரூ.2000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆரம்ப தொகையானது ரூ.1700 கோடிதான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அது 2000 கோடி ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், இந்த 2 அணிகளை ஏலம் விடுவதில் இருந்து ரூ.5000 கோடி வரை வருமானம் ஈட்ட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏலத்திற்காக ரூ.10 லட்சத்தை டெபாசிட் பணமாக செலுத்த வேண்டும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிபந்தனைகள் என்ன?
புதிய ஐபிஎல் அணியை வாங்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகளும் உள்ளன. ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஐபிஎல் அணியை வாங்க தகுதியானவை. புதிதாக உருவாக்கப்படும் அணிகள், அகமதாபாத், லக்னோ அல்லது புனேவை மையமாக கொண்டு உருவாக்கப்படலாம். ஏனென்றால், அகமாதாபாத்தில் நரேந்திர மோடி மைதானம் மற்றும் லக்னோவில் எக்னா மைதானம் என வசதிகள் உள்ளன.
மோதிக்கொள்ளும் நிறுவனங்கள்
ரூ.2000 கோடியே அடிப்படை தொகை எனக்கூறப்பட்டு வரும் நிலையில் அணிகளை வாங்க பல முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக அதானி குழுமமும், ஆர்பிஎஜி குழுமமும் 2 அணிகளை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஐபிஎல் சிக்கல்
தற்போது இருக்கும் முறைபடி பார்த்தால், 2 புதிய அணிகள் வந்தால் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக 94 ஆக உயரும். மேலும் கிட்டத்தட்ட 3 மாத காலங்கள் அதற்கு தேவைப்படும். எனவே போட்டிகளின் எண்ணிக்கையை 74 ஆக குறைத்து 60 நாட்களுக்குள் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
புது முறை
அதாவது, தற்போதைய விதிமுறை படி, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை லீக் போட்டியில் மோத வேண்டும். அதன் பின்னர் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும். ஆனால் புதிய நடைமுறையில், மொத்தம் உள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக ( தலா 5) பிரிக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை போட்டியிட்டு, புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
பிசிசிஐ திட்டம்
2 புதிய அணிகளை வைத்து பிசிசிஐ பெரிய திட்டங்களை போட்டு வருகிறது. அதாவது இரு அணிகளாலும் கிட்டத்தட்ட 14 போட்டிகள் கூடுதலாக நடக்கும். இதன் மூலம் சுமார் ரூ.800 கோடி வரை பிசிசிஐக்கு வருமான கிடைக்கவுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியிடம் இருந்தும் சுமார் ரூ.2000 கோடி வரை வருவாய் கிடைக்கவுள்ளது. வீரர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும் எனத்தெரிகிறது.