ரசிகர்களுக்கு குழப்பம்
சிஎஸ்கே இந்தாண்டு கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்த போதும், அந்த அணியின் எதிர்காலம் குறித்த கவலை அனைவருக்கும் உள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு 2 புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைக்கப்படுகின்றன. இதனால் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும் என்பது தெரியவில்லை. 40 வயதாகும் தோனியை முன்னுரிமை கொடுத்து சிஎஸ்கே எடுக்குமா என்பது குழப்பமாக உள்ளது.
மெகா ஏலம்
சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அடுத்தாண்டு ஐபிஎல்-ல் 41வயதை எட்டிவிடும். இளம் வீரர்களை தக்கவைத்துக்கொண்டு அடுத்த 3 ஆண்டுகளுக்கு வெற்றிக் காண யோசனையை சிஎஸ்கே எடுக்கும், என்றும் தோனியை கழட்டிவிட்டுவிடும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும் தோனி இதுகுறித்து இன்னும் தெளிவான பதிலைக் கொடுக்கவில்லை.
தோனியின் விளக்கம்
இதுகுறித்து பேசிய தோனி, நான் நிச்சயம் அடுத்தாண்டு ஐபிஎல்-ல் பங்கேற்பேன். ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடுவேனா என்பது தெரியவில்லை. சிஎஸ்கேவின் நலனை பொறுத்துதான் எந்த முடிவும் எடுக்கப்படும். 2 புதிய அணிகள் வருகிறது என்பதால் தற்போதைக்கு எந்தவித பதிலும் கூற முடியாது எனத்தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் தோனியின் நிலை குறித்து சிஎஸ்கேவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் தக்கவைப்பதற்கான முதல் வாய்ப்பையே தோனி மீதுதான் பயன்படுத்துவோம். சிஎஸ்கே என்ற இந்த கப்பலுக்கு நிச்சயம் கேப்டன் தேவை. எனவே அவரைதான் முதலில் தேர்வு செய்வோம் எனத்தெரிவித்துள்ளார்.
ஆவலுடன் காத்திருப்பு
தோனியை தக்கவைக்க கூடாது என எந்த அணி நினைக்கும். புதிதாக வரவுள்ள 2 அணிகள் கூட தோனியை எடுக்க நினைக்கலாம். இதனால் தோனிக்கான கடும் போட்டியை காண ஆவலுடன் காத்துள்ளோம். ஏலத்தின் போது எத்தனை விதிமுறைகள் வேண்டுமானாலும் கொண்டுவரப்படலாம். அதில் அனைத்திலும் தோனியை மீண்டும் தக்கவைப்பதிலேயே தான் எங்களின் முதன்மை கவனம் இருக்கும் எனத்தெரிவித்துள்ளார்.