ரசிகர்களுக்கு குழப்பம்
சிஎஸ்கே இந்தாண்டு கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்த போதும், அந்த அணியின் எதிர்காலம் குறித்த கவலை அனைவருக்கும் உள்ளது. ஏனென்றால் தோனிக்கு தற்போதே 40 வயது ஆகிவிட்டது. எனவே அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் தான் அணிக்குள் எழுந்துள்ளது.
தோனியின் விளக்கம்
ஆனால் இந்தாண்டு தொடர் முடிந்தவுடனேயே தோனி தெளிவாக ஒரு கருத்தை தெரிவித்துவிட்டார். அதாவது அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் நான் நிச்சயம் பங்கேற்பேன். சென்னையில் தான் எனது ஓய்வு இருக்கும் எனத் தெரிவித்துவிட்டார். எனினும் அடுத்தாண்டு 2 புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைக்கப்படுவதால் மெகா ஏலத்தின் போதே புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சிஎஸ்கே அடுத்த கேப்டன்
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜாதான் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் ரெய்னாவின் ஃபார்மும் மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே அவரை அடுத்தாண்டு சிஎஸ்கே தக்கவைக்குமா என்பது தெரியவில்லை. எனினும் ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். தோனிக்கு பல்வேறு சமயங்களில் உதவியுள்ளார். இதனால் அவரை அடுத்த கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கொண்டாடும் ரசிகர்கள்
இந்த தகவலை தொடர்ந்து, உற்சாகமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் அடுத்த கேப்டன் ஜடேஜா தான் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அடுத்த கேப்டன் குறித்த அறிவிப்பை விரைவில் சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனக்கூறப்படுகிறது. இதற்காக மெகா ஏலத்தில் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரைத்தான் தக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.