சிஎஸ்கே அணி
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதன்மை தேர்வாக ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கு தக்கவைத்தது. அவருக்கு பின்பு தான் தோனி தக்கவைக்கப்பட்டார். 3வது மற்றும் 4வது தேர்வுகளாக இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள். இந்நிலையில் சென்னை அணியில் தோனியின் அனைத்து வியூகங்களையும் அறிந்த 3 முக்கிய வீரர்களை வாங்க அணிகள் போட்டி போடுகின்றன.
அயல்நாட்டு வீரர்
அனைத்து அணிகளிலும் தற்போது ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் சிஎஸ்கே அணியின் தூணாக இருந்த டூப்ளசிஸை குறிவைத்து அனைத்து அணிகளும் பணத்தை வாரி வழங்க தயாராகவுள்ளது. குறிப்பாக புதிதாக வந்துள்ள லக்னோ அணி, கே.எல்.ராகுலுடன் இணைந்து ஓப்பனிங் களமிறங்க டூப்ளசிஸை எடுக்க திட்டமிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற வீரர்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாகும். சிஎஸ்கே அணி 3 முறை கோப்பை வென்றபோது உறுதுணையாக இருந்தவர். 38 வயதாகும் பிராவோ இன்னும் 2 ஆண்டுகள் எப்படியும் விளையாடுவார் என்பதால் அவரின் அனுபவத்தை எடுத்துக்கொள்ள அனைத்து அணிகளும் முற்படும். அவர் ஐபிஎல் இதுவரை 151 போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும் 1,536 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வியூகத்தை உடைக்க திட்டம்
3வது தேர்வாக சிஎஸ்கேவின் மிக முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவை பல அணிகளும் குறிவைத்துள்ளன. ரெயனாவின் ஃபார்ம் தற்போது மோசமாக இருந்தாலும் அவர் கம்பேக் கொடுப்பார் என நம்பிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி சிஎஸ்கேவின் பலம், பலவீனம் மற்றும் தோனியின் திட்டத்தை எப்படி உடைப்பது ஆகியவற்றை நன்கு அறிந்தவர் என்பதால் போட்டிகள் கடுமையானதாக இருக்கும்.