வெற்றிக்கான காரணம்
கோப்பை வழங்கும் விழாவில் பேசிய ஹர்திக் பாண்டியா, வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. இதை சேர்த்து மொத்தம் 5 முறை ஐபிஎல் கோப்பையை வீரராக வென்று இருக்கிறேன். அதற்கு அதிர்ஷ்டம் எனக்கு கை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு அணியாக விளையாடினால் வெற்றி நிச்சயம் என்பதை மற்ற அணிகளுக்கு எடுத்துக் காட்டாக எங்கள் வெற்றி இருக்கும்.
சிறந்து பந்துவீச்சாளர்கள்
நல்ல அணியை கட்டமைத்து, நல்ல மனிதர்கள் எங்களை சூழ இருந்ததால் அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது. நான் யோசிக்கும் விதமும், பயிற்சியாளர் நெஹ்ரா யோசிக்கும் விதமும் ஒன்றாகவே இருந்தது. எங்கள் அணியின் சூழலும் சிறப்பாக இருந்தது. நாங்கள் திறமையான பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட வேண்டும் என்று எண்ணினோம். டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனுடைய போட்டியாக இருக்கலாம்.
தவறுகளை திருத்தி கொள்வோம்
ஆனால் உங்களுக்கு பந்துவீச்சாளர்கள் தான் போட்டியை வென்று தருவார்கள். நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற பிறகும், என்ன தவறு செய்தோம், அதனை எப்படி திருத்தி கொண்டு முன்னேறுவது என்பதை பற்றி பேசுவோம். அனைவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்கள். எங்கள் அணியை மகத்தான அணியாகவும், பல வெற்றிகளை பெற்ற அணியாக உருவாக்க வேண்டும் என்று எண்ணினோம்.
டி20 உலகக் கோப்பை கனவு
பல தலைமுறைகள் வந்த பிறகும், நாங்கள் முதல் தொடரிலேயே கோப்பையை வென்றது குறித்து பேசுவார்கள். அணியின் வெற்றிக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் என்னுடைய உண்மையான குறிக்கோள், டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று தர காரணமாக இருக்க வேண்டும் என்பதே. அதற்கான பயணம் தொடரும்.