மும்பை: ஐபிஎல் தொடரில் வாழ்வா சாவா ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற 169 ரன்களை இலக்காக குஜராத் நிர்ணயித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்று, டெல்லி அணி மும்பையிடம் வீழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கும்.
இந்த நிலையில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாஹா மற்றும் மேத்தீவ் வேட் பொறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். அப்போது மேத்தீவ் வேட் 16 ரன்களில் நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். சாஹா 22 பந்தில் 31 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை தந்தார்.
இதன் பின்னர் களத்துக்கு வந்த ஹர்திக் பாண்டியா முதலில் நிதானமாக ஆடி, பின்னர் அதிரடியை காட்டினார். அவருக்கு டேவிட் மில்லர் நல்ல துணையாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் அரைசதம் அடித்தார். டேவிட் மில்லர் 3 சிக்சர்களை விளாசி 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திவாட்டியா 2 ரன்னில் ஏமாற்றம் அளிக்க, ரஷித் கான் 6 பந்தில் 2 சிக்சர் உள்பட 19 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 62 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. 1 விக்கெட் வீழ்த்திய ஹசரங்கா பர்பிள் நிற தொப்பியை கைப்பற்றினார்.