பெஸ்ட் ஃபினிஷர்
நடப்பு தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஆர்சிபி அணிக்காக அவுட்டாகாமல் வெற்றி பெற்றுத்தரும் தினேஷ் கார்த்திக் நேற்றும் அதிரடி காட்டினார். ஆர்சிபி அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது வந்த அவர், 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசித் தள்ளினார்.
ரசிகர்கள் வாழ்த்து
இதனையடுத்து இந்தியாவின் சிறந்த ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் தான் இருப்பார் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். இந்திய கிரிக்கெட் அணி சரிவுக்கு செல்லும் போதெல்லாம்,,தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி பெறுவோம் என நம்புவார்கள். அதே போன்ற காட்சி நேற்று தினேஷ் கார்த்திக் இருந்த போது நடந்தது.
புதிய பிரச்சினை
இந்நிலையில் அவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல், ஸ்குவாஸ் வீராங்கனை ஆவார். உலக இரட்டையர் பிரிவு சாம்பியன்ஷிப்பில் கலந்துக்கொண்ட அவர், கலப்பு பிரிவு மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு என இரண்டிலுமே சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சர்ச்சை பதிவு
இதுகுறித்து செய்தி வெளியிட்ட தனியார் ஊடகம், தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றதாக பதிவிட்டது. இதனை கண்டு ஆத்திரமடைந்த பிரபல கிரிக்கெட் வல்லுநர் ஹர்ஷா போக்லே, " தீபிகா பல்லிக்கல் தனது சொந்த காலில் நின்று சாதித்துள்ளார். அவரின் கணவரின் பெயரை முன்னர் பதிவிட்டு செய்தி வெளியிடுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை, உடனடியாக நீக்குங்கள்" என கண்டனம் தெரிவித்தார்.
இதனையடுத்து அந்த தனியார் நிறுவனத்தின் மீது ரசிகர்களும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.