ஜேசன் ராய் விலகல்
இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய்-ஐ ரூ. 2 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்திருந்தது. தொடக்க வீரராகவும் களமிறக்க திட்டமிட்டது. ஆனால் நேற்று திடீரென ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாகவும், பயோ பபுள் சூழலில் 2 மாதங்கள் இருக்க முடியாது எனவும் அறிவித்தார். இதனால் அவருக்கு மாற்று வீரரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுரேஷ் ரெய்னா
அதன்படி முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னாவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாஹாவை ஓப்பனிங் களமிறக்கிவிட்டு, ரெய்னாவை முதல் விக்கெட்டிற்கு களமிறக்கினால் சிறப்பான டாப் ஆர்டர் அமையும். இதே போல கூடுதலாக பவுலிங் ஒரு வேகப்பந்துவீச்சாளரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாண்ட்யாவுக்கு தலைவலி
இந்நிலையில் இதில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தான் பெரும் தலைவலியாக போகும். ஏனென்றால் ரெய்னா வந்தால், அணியின் சீனியர் வீரராக அவர் தான் இருப்பார். ஒருவேளை முதல் ஓரிரு போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சியில் சொதப்பினால் நேராக கேப்டன் பதவியை ரெய்னாவிடம் கொடுத்துவிடுவார்கள். இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஏனென்றால் இதுவரை பாண்ட்யா கேப்டன்சியே செய்தது கிடையாது.
குஜராத்துடனான உறவு
பாண்ட்யா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அணியின் விளம்பரம் பெரியளவில் ரசிகர்களிடம் சென்றடையும். இதுதான் அவரை கேப்டனாக நியமிக்க முக்கிய காரணம். ஆனால் சுரேஷ் ரெய்னாவும் குஜராத் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான். ஏற்கனவே குஜராத் லையன்ஸ் அணியை ரெய்னா தான் 2 ஆண்டுகள் வழிநடத்தியுள்ளார். இதனால் அவருக்கும் நற்பெயர் உள்ளது.
ஐபிஎல் வியூகம் அறிந்தவர்
இதுமட்டுமல்லாமல், ஐபிஎல்-ன் கிரிக்கெட்டின் அனைத்தும் வியூகங்களும் ரெய்னாவுக்கு தெரியும். குறிப்பாக எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா ஆகிய முன்னணி கேப்டன்கள் என்ன செய்வார்கள் என்பது சுரேஷ் ரெய்னாவுக்கு நன்கு தெரியும். இதனால் அவரை கேப்டனாக நியமிக்க குஜராத் அணி சற்றும் யோசிக்காது.