கேப்டன்சி பிரச்சினை
சிஎஸ்கேவின் சோகம் ஒருபுறம் இருக்க, ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சி சர்ச்சை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா, அதற்கு அடுத்த போட்டியிலேயே ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் காயம் என்ற காரணம் கூறி தொடரில் இருந்தே விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
சிஎஸ்கே விளக்கம்
கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜாவுக்கும் - சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதனால் தான் ரெய்னாவை போன்றே அவரும் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்கு பதிலளித்திருந்த அணி சிஇஓ காசி விஸ்வநாதன், சிஎஸ்கே வெளியேறிவிட்டது. இனி காயமான வீரர்களை மேலும் காயப்படுத்த வேண்டாம் என்ற காரணத்திற்காக மட்டும் தான் ஜடேஜா வெளியேறியதாக கூறினார்.
நண்பர் தந்த தகவல்
இந்நிலையில் ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் புது தகவலை கூறியுள்ளார். அதில், ஜடேஜா உண்மையாகவே மிகவும் வருத்தத்துடனும், மனவேதனையுடனும் தான் உள்ளார். கேப்டன்சி விவகாரத்தை சிஎஸ்கே இன்னும் கொஞ்சம் சரியாக கையாண்டிருக்கலாம். அனைத்தும் மிக வேகமாகவும், பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது.
அணியில் நீடிப்பாரா?
இதுபோன்ற விஷயங்கள் நடந்தால் எப்படிப்பட்ட மனிதருக்கும் வலிகள் இருக்க தான் செய்யும். ஜடேஜா சிஎஸ்கே அணியில் இனி இருப்பாரா? இருக்க மாட்டாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போதைக்கு அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது உண்மை தான் எனக் கூறியுள்ளார்.