ரிங்கு சிங்கின் போராட்டம்
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 150 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் அப்போதே தோற்றுவிடும் என கணிக்கப்பட்டது. ஆனால் இளம் வீரர் ரிங்கு சிங் அதை மாற்றி அமைத்தார். 7வது வீரராக களமிறங்கிய அவர் 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களை விளாசினார்.
கடைசி ஓவர் பரபரப்பு
இதனால் 20 பந்துகளில் 61 ரன்கள் தேவை என்ற சூழல் கடைசி 6 பந்துகளில் 21 ரன்கள் தேவை என மாறியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளில் 4, 6, 6, 2 என விளாசினார். இதனால் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை இருந்தது. அப்போது தான் ஸ்டோய்னிஸ் வீசிய வைட் லைன் பந்தில் ரிங்கு சிங் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கொல்கத்தா தோற்றது.
திடீர் சர்ச்சை
இந்நிலையில் இந்த விக்கெட்டில் புது சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது மார்கஸ் ஸ்டோயினிஸ் வீசிய அந்த பந்து நோ பால் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் கிறீஸை விட்டு, காலை வெளியில் வைத்தது போன்று தெரிகிறது. எனினும் அது தெளிவாக தெரியவில்லை. பரபரப்பில் அம்பயர் அதை கவனிக்கவில்லை.
நடுவர்களின் தவறு என்ன
எது எப்படி இருந்தாலும், இதுபோன்ற முக்கியமான சூழல்களில் 3வது நடுவர்கள் ஒருமுறை பரிசோதித்து பார்த்திருக்க வேண்டும். நடப்பு தொடரில் அம்பயரிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த சூழலில் ஒரு அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பே சென்றுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.