ஐபிஎல் மெகா ஏலம்
மெகா ஏலத்தினால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்கள் வரை அதிகபட்சமாக தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் குறைந்தபட்சமாக ஒரு அயல்நாட்டு வீரரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். எனவே எந்தெந்த அணிகள் யாரை தக்கவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த விஷயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
கேப்டனே கழட்டிவிடப்பட்டார்
இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனின் முதல் பகுதியில் சொதப்பினாலும், 2வது பகுதியில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றது. அந்த அணியின் வீரர்கள் அனைவரும் நன்றாக செயல்பட்ட போதும் கேப்டன் இயான் மோர்கன் மட்டும் பெரியளவில் சோபிக்கவில்லை. எனவே கேப்டன் மோர்கனையே கழட்டிவிட கேகேஆர் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனை அவருக்கும் தெரியப்படுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
படு மோசமான பேட்டிங்
கேகேஆர் அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற இயான் மோர்கன் 17 போட்டிகளில் வெறும் 117 ரன்களை மட்டுமே அடித்தார். அவரின் சராசரி 11 ஆகவே உள்ளது. ஒருவேளை அவர் பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டிருந்தால் அந்த அணி தக்கவைத்திருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அடுத்த சீசனுக்காக புதிய கேப்டனை ஏலமெடுக்க திட்டமிட்டுள்ளது.
தக்கவைப்பு
இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை முதன்மை வீரர்களாக தக்கவைக்கவுள்ளது. ஒருவேளை பேட் கம்மின்ஸ் முழு சீசனும் விளையாடி கொடுப்பேன் என உறுதி அளித்தால் அவரை 3வது வீரராக தக்கவைக்கவுள்ளது. அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆண்ட்ரே ரஸல் அல்லது சுனில் நரேன் ஆகியோரில் யாரேனும் ஒருவரை கேகேஆர் அணி தக்கவைக்கபோகிறது. இதில் அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்கையும் கழட்டிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.