லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
குறிப்பாக புதிதாக வந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பெரியளவில் தொகைகளை கொடுத்து வீரர்களை ஏலம் எடுத்தது. குயிண்டன் டிகாக், ஜேசன் ஹோல்டர், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா என பல முன்னணி வீரர்கள் அந்த அணிக்கு சென்றனர். அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஏலத்தில் இருந்து செயல்பட்டதால் சிறந்த தேர்வுகளும் குறைந்த விலைக்கு கிடைத்தனர்.
கம்பீர் கூறிய வியூகம்
இந்நிலையில் கவுதம் கம்பீர் அதுகுறித்து பேசியுள்ளார். நான் இதற்கு முன்னர் ஏலம் நடைபெறும் இடத்தில் பங்குபெற்றுள்ளேன். ஆனால் ஒரு அணியை முதலில் இருந்து உருவாக்க ஏலம் கேட்டதில்லை. அதற்காக தான் முன்கூட்டியே 3 வீரர்களை நேரடி ஒப்பந்தமாக செய்து அதனை மையமாக வைத்து வீரர்களை தேர்வு செய்தோம். இது சிறந்த அனுபவமாக இருந்தது.
சிறந்த ஏலம்
மெகா ஏலத்தை பொறுத்தவரை நாங்கள் எடுத்த சிறந்த ஏலம் என்னவென்றால் சிஎஸ்கேவிடம் இருந்த கிருஷ்ணப்பா கௌதமை வெறும் ரூ. 90 லட்சத்திற்கு எடுத்துக்கொண்டது தான். ஏனென்றால் அந்த திறமையான வீரரை கடந்தாண்டு சிஎஸ்கே ரூ. 9.25 கோடி கொடுத்து எடுத்திருந்தது. ஆனால் நாங்கள் குறைந்த விலையில் வாங்கியுள்ளோம். நம்பர் 8வது இடத்தில் க்ருணால் பாண்ட்யாவுடன் பேட்டிங் மற்றும் ஸ்பின்னராக செயல்பட கௌதம் சரியாக இருப்பார்.
தோனி மீது குற்றச்சாட்டு
கவுதம் கம்பீர் அதீத நம்பிக்கை வைத்துக்கூறும் இதே கிருஷ்ணப்பா கௌதம் மீது தான் தோனி துளிக்கூட நம்பிக்கை வைக்கவில்லை. கடந்த சீசனில் ரூ.9.25 கோடி கொடுத்து வாங்கி ஒரு போட்டியில் கூட அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்காமல் வெளியே உட்காரவைத்திருந்தார். இதனால் அவருக்கு இந்தாண்டு ஒரு கோடி ரூபாய் கூட ஏலம் கேட்கப்படவில்லை.