மெகா ஏலம்
ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஏலம் நடைபெறும் தேதி
இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர் முதலில் ஐடிடி ( Invitation to tender) எனப்படும் நுழைவுச்சீட்டை அக்டோபர் 20 தேதிக்குள் ( கடைசி நாள்) வாங்கியிருக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் இனி வரும் ஐபிஎல் போட்டிகளின் புதிய வசதிகள், விதிமுறைகள் என அனைத்து திட்டங்களும் அடங்கியிருக்கும். இதனை வாங்குவதற்கும் சில தகுதிகள் வேண்டும். அதாவது ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஐபிஎல் அணியை வாங்க தகுதியானவை. அவர்கள் நுழைவுச்சீட்டை வாங்குவதற்கு ரூ.10,00,000 பணம் செலுத்த வேண்டும்.
மேன்செஸ்டர் யுனைட்டெட்
இதனையடுத்து IIT ஐ வாங்குவதற்காக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முன்வந்தன. இந்நிலையில் அதில் ஆச்சரியம் தரும் வகையில் உலகின் முன்னணி கால்பந்து கிளப்பான மேன்செஸ்ட்டர் யுனைடெட்டை நடத்தி வரும் தி க்ளேசர் ஃபேமிலி குழுமம், ஐபிஎல் அணிகளை ஏலம் எடுப்பதற்காக விண்ணப்பம் பெற்றுள்ளது. கால்பந்து உலகில் கொடிகட்டி பறந்து வரும் இந்த நிறுவனம் தற்போது உலகின் மிகவும் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட்டான ஐபிஎல்-லும் தடம் பதித்துள்ளது.
உண்மை காரணம்
IIT-ஐ வாங்கினாலும், ஏலத்தின் போது அந்த நிறுவனம் பங்கேற்குமா என்பது சந்தேகமே. முன்னணி நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துக்கொள்ளாமல் தங்களது வியாபார நோக்கத்திற்காக விண்ணப்ப படிவத்தை மட்டும் வாங்கி ஐபிஎல் திட்டங்களை தெரிந்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், டிஸ்னி நிறுவனம் தற்போது விண்ணப்பத்தை வாங்கினால், அடுத்த வரும் ஆண்டுகளில் எப்படி ஒளிபரப்பிற்கு முதலீடு செய்யலாம் என யோசிக்கும். அதற்காகவே தி க்ளேசர் ஃபேமிலியும் வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. எது எப்படியிருந்தாலும், வரும் அக்டோபர் 26ம் தேதியன்று துபாயில் நடைபெறும் ஏலத்தின் போது எந்த நிறுவனம் புதிய அணிகளை வாங்குகிறது என்பது தெரியவரும்.