லக்னோ அணி மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் வீரர்களை ஏலம் எடுக்கும் விவகாரத்தில் புதிதாக வந்துள்ள லக்னோ அணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. புதிய அணிகளுக்கு மெகா ஏலத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பழைய அணியும் அக்.30ம் தேதி தக்கவைக்கும் வீரர்களை அறிவித்த பின்னர், மீதமுள்ள வீரர்களில் யாரை வேண்டுமானாலும் புதிய அணிகள் நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. ஆனால் ஒப்பந்த காலத்திற்கு முன்பே லக்னோ அணி செயல்பட்டதாக கூறப்படுகிறது.
கே.எல்.ராகுல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், இந்தாண்டு அணியில் இருந்து வெளியேறுவதாக முடிவெடுத்துள்ளார். அந்த அணி நிர்வாகத்துடன் சரியான உறவு இல்லை என்பதால் வெளியேறுகிறார். இதே போல அவரை அதிகபட்சமாக ரூ.16 கோடிக்கு தான் பஞ்சாப் அணி ஏலம் எடுக்க முடியும். ஆனால் அவரிடம் லக்னோ அணி ரூ. 20 கோடி ஊதியம் பேசியிருப்பதாக தெரிகிறது. இதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஐதராபாத் வீரர்
இது ஒருபுறம் இருக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் முக்கிய ஸ்பின்னராக விளங்கும் ரஷித் கானுக்கு அந்த அணி ரூ.12 கோடி கொடுத்து தக்கவைப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அதற்கு உடன்படாத ரஷித், ரூ.16 கோடி கொடுத்தால் மட்டுமே அணியில் இருப்பேன் என தடாலடியாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. திடீரென ரஷித் நிபந்தனை விதிப்பதற்கு காரணம், லக்னோ அணி அவருக்கு ரூ.16 கோடி ஊதியம் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியது தான்.
Recommended Video
பிசிசிஐ-ன் பதில்
வீரர்களின் ஒப்பந்த காலம் முடிவடைவதற்குள் வீரர்களை அணுகுவது விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே லக்னோ அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங் அணிகள் முறையிட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.