ஸ்ரேயாஸ் ஐயர்
எங்கு சென்றாலும் கேப்டனாக மட்டுமே இருப்பேன் என அடம்பிடிக்கும் அவரை புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் கேப்டனாக ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்புகள் குறைந்தன. லக்னோ அணி கே.எல்.ராகுலையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யாவையும் முன்னிறுத்தி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மெகா ஏலத்திற்கு வரவுள்ளார்.
3 அணிகள் போட்டி
அவரை ஏலத்தில் எடுக்க என்ன செலவுகள் ஆனாலும் பரவாயில்லை என்பது போல 3 அணிகள் காத்துள்ளன. ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தான் அவை. இந்த 3 அணிகளுக்குமே தற்போது நல்ல கேப்டன்கள் தேவைப்படுகின்றனர். எனவே அதற்காக அதிக தொகைகளை இறக்கவுள்ளனர். குறிப்பாக ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே கடும் மோதல் இருக்கும்.
என்ன காரணம்
ஏனென்றால் இந்த 2 அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே அதனை நிறைவேற்றிக்கொடுக்க கூடிய திறமை உள்ளவர் ஸ்ரேயாஸ். தொடர் தோல்விகளில் தத்தளித்த டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் ரிஷப் பண்ட் வந்தவுடன் டெல்லி அணி அவரை கழட்டிவிட்டுள்ளது. எனவே இவரை கேப்டனாக நியமித்தால் சிறப்பாக இருக்கும் என போட்டிப் போடுகின்றனர்.
ஐபிஎல்-ல் புது மைல்கல்
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக கிறிஸ் மோரிஸ் உள்ளார். இவரை கடந்தாண்டு ராஜஸ்தான் அணி ரூ.16.5 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் இந்தாண்டு இதனையும் முறியடித்து ஸ்ரேயாஸ் அந்த இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு அறிமுகமாகி 7 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஆண்டிற்கு ரூ.7 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். அது இந்தாண்டு பல மடங்கு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.