முதல் பெருமை
யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதுவும் டாஸில் வென்றால் தான் போட்டியில் வெற்றி என்ற சூழல் இருக்கும் நிலையில் ராஜஸ்தான் அணி 3 முறை டாஸில் தோல்வியடைந்தும் வெற்றிகளை பெற்றுள்ளது.
அதிக ரன் குவித்தவர்
ஐபிஎல்-ல் அதிக ரன் அடித்துள்ள வீரருக்கு ஆரஞ்ச் நிற தொப்பி வழங்கப்படும். அந்த வகையில் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் இதுவரை 4 போட்டிகளில் 218 ரன்களை குவித்து அதனை பெற்றுள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். லக்னோ அணியின் குயிண்டன் டிக்காக் 188 ரன்களுடன் 2வது இடமும், குஜராத் அணியின் சுப்மன் கில் 180 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
அதிக விக்கெட்டுகள்
ஐபிஎல்-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக நேற்று வரை கொல்கத்தா அணி வீரர் உமேஷ் யாதவ் இருந்து வந்தார். ஆனால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் வீரர் யுவேந்திர சாஹல் 11 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பிடித்தார். உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 10 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
கோப்பைக்கான வாய்ப்பு
இந்தாண்டு ராஜஸ்தான் அணி தான் கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த அணி மிகவும் பலமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. பேட்டிங்கில் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக் என அட்டகாச வரிசையும், பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், அஸ்வின், பிரஷித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட் என மிகவும் அட்டகாசமாக உள்ளது.