மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றதால் புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 29 பந்துகளில் 41 ரன்களை அடித்து அதிரடி தொடக்கம் தந்தார். எனினும் மற்றொரு ஓப்பனிங் வீரர் ஜாஸ் பட்லர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 32 ரன்களும், தேவ்தத் பட்டிக்கல் ரன்களையும் குவித்தனர். அடுத்தடுத்து வந்த ரியான் பராக் 19, நீஷம் 14, அஸ்வின் 10 என அதிரடி காட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர்கள் டிக்காக் 7 ரன்களுக்கும், கே.எல்.ராகுல் 10 ரன்களுக்கும் வெளியேறினர். ஆயூஸ் பதோனி டக் அவுட்டானார். தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன்களை விளாசிய போதும், அவருக்கு உறுதுணையாக யாரும் நிற்கவில்லை. இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு அந்த அணி 154 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த போட்டியின் முடிவால் புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றம் உருவாகியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மற்றும் லக்னோ என இரண்டு அணிகளுமே 13 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ளன. இதில் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. லக்னோ 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.