ரசிகர்களின் சோகம்
எனினும் ரசிகர்களுக்கு இது பெரியளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதில்லை. இதற்கு காரணம் விராட் கோலியின் டக் அவுட் தான். 2017ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சமீரா வைட் லைனில் வீசிய பந்தை கோலி தேவையின்றி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
விராட் கோலி ஃபார்ம்
நடப்பு சீசனில் கோலியின் ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் கோலி 119 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 123.95 ரன்கள் மட்டுமே. நட்சத்திர வீரராக பார்க்கப்படும் கோலி, ஏன் இப்படி சொதப்பி வருகிறார் என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
ரவிசாஸ்திரி கருத்து
இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், நான் பயிற்சியாளராக இருந்த போதுதான் கோலிக்கு முதல் சிக்கல் எழுந்தது. ஒரு வீரர் மீது அதிக எதிர்பார்ப்புகளும், அழுத்தங்களும் எழுந்தால் இப்படி தான் ஆகும். சதம் அடிக்கவில்லை, அதிக எதிர்பார்ப்பு, திருமணம், குழந்தை என பல குழப்பங்களால் விராட் கோலி வருத்தத்தில் உள்ளார்.
2 மாத ஓய்வு தேவை
இதனால் கோலி மிகவும் நொந்துவிட்டார். அவருக்கு நிச்சயமாக தற்போது ஒரு ஓய்வு தேவை. கோலிக்கு இன்னும் 6 -7 ஆண்டு கிரிக்கெட் உள்ளது. இதனை நினைத்துக் கொண்டே அதனை இழந்துவிடக்கூடாது. 2 மாதங்கள் அல்லது ஒன்றரை மாதங்களாவது விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும்.
ஓய்வு எப்போது வேண்டும்
டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். எனவே அதற்கு முன்னதாகவாவது அல்லது, சுற்றுப்பயணத்திற்கு பின்னர் கோலி ஓய்வெடுத்தே தீர வேண்டும். இல்லையென்றால் சிரமம் என ரவிசாஸ்திரி எச்சரித்துள்ளார்.