கடைசி ஓவர்
சிஎஸ்கேக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தோனியும், ஜடேஜாவும் கடைசி ஓவரை எதிர்கொண்டனர். இந்த ஓவரை வீசிய ரிஷி தவான் முதல் பந்திலேயே சிக்சரை விட்டு கொடுத்தார். இதனால் மும்பைக்கு எதிராக வென்றது போல், சிஎஸ்கேவுக்கு மீண்டும் தோனி வெற்றியை பெற்று தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கவனத்தை ஈர்த்த ரிஷி தவான்
ஆனால் ரிஷி தவான் பின்னர் அபாரமாக பந்துவீசி தோனியின் விக்கெட்டை வீழ்த்தி கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் போது ரிஷி தவான் ஃபேஸ் மாஸ்க் அணிந்து பந்துவீசிய சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
காரணம் இது தான்
இதன் மூலம் முதன் முதலாக ஃபேஸ் மாஸ்க் அணிந்து பந்துவீசிய நபர் என்ற பெருமையை அவர் பெற்றாலும், ரசிகர்கள் அவரை ஓட்டி எடுத்தனர். ஆனால் அவர் அணிந்ததற்கான உண்மை காரணமே வேறு. ரஞ்சி போட்டியில் விளையாடிய போது, அவர் இதே போன்று ஓவர் வீச, பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரது முகத்தை பதம் பார்த்தது.
ரத்தம் கொட்டியது
இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனையடுத்து, மைதானத்திலிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் மீண்டும் அவரது முகத்தில் பந்து பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் ஃபேஸ் மாஸ்க் அணிந்து விளையாடினார். உண்மையில் ஒரு சூப்பர் ஹீரோ போல் முகமூடி அணிந்து விளையாடினார் என்று சொல்வதே நிதர்சனம்.