ஐபிஎல் மெகா ஏலம்
மெகா ஏலத்தினால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்கள் வரை அதிகபட்சமாக தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் குறைந்தபட்சமாக ஒரு அயல்நாட்டு வீரரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். எனவே எந்தெந்த அணிகள் யாரை தக்கவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த விஷயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
கேப்டனே கழட்டிவிடப்பட்டார்
இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனின் முதல் பகுதியில் சொதப்பினாலும், 2வது பகுதியில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றது. அந்த அணியின் வீரர்கள் அனைவரும் நன்றாக செயல்பட்ட போதும் கேப்டன் இயான் மோர்கன் மட்டும் பெரியளவில் சோபிக்கவில்லை. எனவே கேப்டன் மோர்கனையே கழட்டிவிட கேகேஆர் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
தக்கவைப்பு
அந்த அணியின் முதன்மை தேர்வாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் தக்கவைக்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் தூண் போன்று நிலைத்து ஆடும் ரஸல் ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2வது வீரராக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ரூ. 8 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இளம் வீரருக்கு வாய்ப்பு
இவர்களுக்கு அடுத்தபடியாக இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் 3வது வீரராக ரூ. 8 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார். இதனால் அவரின் மதிப்பு அதிகரித்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த சுனில் நரேன் ரூ.6 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். இதில் அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்கையும் கழட்டிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.