புது அணிகளின் திட்டம்
இந்நிலையில் கழட்டிவிடப்பட்ட முக்கிய வீரர்கள் சிலர் மெகா ஏலத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே வேறு அணிகளில் இணையவுள்ளனர். அதாவது புதிதாக வந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள், மெகா ஏலத்திற்கு முன்பாக ஏதேனும் 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை நேரடியாக அணுகி ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதிய அணிகள் தங்களது பணியை தொடங்கிவிட்டன.
அணி தாவும் கே.எல்.ராகுல்
இந்த பட்டியலில் மிக முக்கியமானவர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோர் உள்ளனர். பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த கே.எல்.ராகுலுக்கு, அங்கு ரூ.16 கோடி தான் அதிகபட்சம் சம்பளம் கிடைக்கும். ஆனால் ரூ.20 கோடி கொடுத்து கேப்டன் பதவியும் கொடுப்பதாக லக்னோ அணி கூறியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தான் அவர் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
ரஷித்தின் மதிப்பு
இதே போல சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்த முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானும் லக்னோ அணிக்கு செல்லவுள்ளார். அவர் ஐதராபாத் அணியில் ரூ.16 கோடி ஊதியம் வேண்டும் எனக் கேட்டிருந்தார். அதற்கு ஐதராபாத் அணி ஒப்புக்கொள்ளாத நிலையில் லக்னோ அணி கொடுக்க தயாராக உள்ளது. இதனால் தான் அவர் வெளியேறினார்.
அகமதாபாத்
ஐதராபாத் அணியின் முக்கிய வீரராக இருந்து வந்த டேவிட் வார்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியேறினார். ஆனால் அவரை கேப்டனாக நியமிக்க அகமதாபாத் அணி தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது. ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட யுவேந்திர சாஹலும் அகமதாபாத் அணியில் இணையவிருப்பதாக தெரிகிறது. இதில் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால் பாண்ட்யா சகோதரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி கழற்றிவிட்டது தான். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அகமதாபாத் அணி முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமின்றி க்ருணால் பாண்ட்யாவையும் மெகா ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.