மெகா ஏலம் தேதி
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மெகா ஏலத்தால் அனைத்து அணிகளின் வீரர்களும் பெரும் வாரியாக மாற்றப்படுவார்கள். அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் என பிசிசிஐ அறிவித்துவிட்டது. அந்த தக்கவைப்போகும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஏலமானது டிசம்பர் மாதம் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவிருப்பதால் ஐபிஎல் தொடர் கலைக்கட்டப்போகிறது என ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
ஐபிஎல் தொடங்கும் தேதி
இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. அதாவது 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கலாம் என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனையில் ஏப்ரல் 2ம் தேதியை ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 4 அல்லது 5ம் தேதி நடைபெறும். ஐபிஎல் பங்குதாரர்களிடம் இந்த தேதியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டதாக தெரிகிறது.
முதல் போட்டி எங்கு
அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை - மும்பை அணிகள் மோதுவதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் மொத்தமாக 74 போட்டிகள் நடைபெறும். அவற்றினை 60 நாட்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்
புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகள் விளையாடவுள்ளன. இதில் 7 போட்டிகள் ஹோம் மைதானத்திலும், 7 போட்டிகள் வேறு மைதானங்களிலும் நடைபெறவுள்ளன. மெகா ஏலம் நடைபெற்று முடிந்தவுடன் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.