அகமதாபாத்: சிறிய இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்த குஜராத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள், முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அசாத்திய வெற்றியை பெற்றது. கடைசி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், கேகேஆர் அணியின் ரிங்கு சிங் 5 சிக்சர்களை விளாசி அற்புதம் நிகழ்த்தினார். அந்த ஓவரை வீசிய யாஷ் தயாள் மனமுடைந்து மைதானத்தில் நடந்துவந்த காட்சிகள் ரசிகர்களிடையே வேகமாக பரவியது.
அந்தப் போட்டிக்கு பின் யாஷ் தயாள் குஜராத் அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, உடல்நிலையிலும் பாதிப்படைந்தார். திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாஷ் தயாள், 5 முதல் 7 கிலோ எடை வரை குறைந்தார். அதுமட்டுமல்லாமல் யாஷ் தயாள் மீண்டு வர வேண்டும் என்று குஜராத் அணியின் ஹர்திக் பாண்டியா பேசியிருந்தார்.
அவ்வாறு பேசியதோடு மட்டும் நிற்காமல், காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ள யாஷ் தயாளுக்கு வாய்ப்பும் வழங்கி ஹர்திக் பாண்டியா அசத்தியுள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாளை இம்பேக்ட் பிளேயராக குஜராத் அணி களமிறக்கியது. முதல் ஓவரை ஷமி வீசிய நிலையில், 2வது ஓவரை வீச யாஷ் தயாள் அழைக்கப்பட்டார்.
அவரிடம் பந்தை கொடுத்துவிட்டு சில நிமிடங்களில் ஹர்திக் பாண்டியா அவருக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதன்பின்னர் யாஷ் தயாள் வீசிய முதல் பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. அதன்பின்னர் லென்த்தை மாற்றிய யாஷ் தயாள், 4வது பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து யாஷ் தயாளுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த ஹர்திக் பாண்டியாவின் செயலும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டுகளை பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் சென்னை அணியின் இயல்பான சூழலை போன்ற குஜராத் அணியின் சூழலை உருவாக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். தற்போது சோதனையான காலகட்டத்தில் இருந்த யாஷ் தயாளுக்கு வாய்ப்பு வழங்கியதன் மூலம் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தலை நிமிர்ந்துள்ளார்.