உத்தரவு
ஐபிஎல் தொடர் மே மாதம் 28ஆம் தேதி முடிவடையும் நிலையில் அடுத்த 10 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏறக்குறைய தகுதி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது அணியாக இந்தியா முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்களை பிளே ஆப் சுற்றின் போது இங்கிலாந்து திரும்பும் படி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வீரர்களும் விலகல்
இதன்படி மே 20 ஆம் தேதி ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இல்லை என்றால் அது ஐபிஎல் முடிவுகளை பாதிக்க கூடும். பிரச்சனை இதோடு நிற்கவில்லை. ஆஸ்திரேலிய தங்களது வீரர்களை அழைக்கும் மாதிரியே இந்திய அணி வீரர்களும் பிளே ஆப் சுற்றிலிருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனென்றால் ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்று 10 ஆண்டுகள் ஆகிறது.
அதிருப்தி
அதனை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ஐபிஎல் ஐ வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என பிசிசிஐ உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஜடேஜா முஹம்மது சிராஜ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரை விட்டு விலக வாய்ப்பு இருக்கிறது. இப்படி முக்கிய வீரர்கள் அனைவரும் விலகினால் ஐபிஎல் புகழ் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
பிசிசிஐ யோசனை
இதனால் கடுப்பான ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு வீரர்கள் உட்பட யாரையும் ஐபிஎல் தொடர் முடியும் வரை அனுப்பக்கூடாது என பிசிசிஐக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ முழித்து வருகிறது. இந்திய வீரர்களை அனுப்பும் முடிவிலிருந்து பின்வாங்கி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. ஆனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் முக்கியம் என்பதால் அதனை ஒரு வாரம் பின்னுக்கு தள்ளிவிடலாமா? இல்லை ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு முன்பாகவே முடித்து விடலாமா என்ற யோசனையில் பிசிசிஐ இருக்கிறது. இதனிடையே நியூசிலாந்தும், இங்கிலாந்தும் ஜூன் முதல் வாரத்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார்கள். இதனால் இரு அணி வீரர்களும் ஐபிஎல் தொடரின் கடைசி வாரத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.