பெங்களூர்: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி, கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் 82 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். லீக் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. பெங்களூரில் மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. நேரம் அதிகமானதால் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது.
பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் 3 ஓவரில் பெங்களூர் அணி 17 ரன்கள்தான் எடுத்திருந்தனர். 4-வது ஓவரை அபாட் வீசினார். இந்த ஓவரில் விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெய்ல் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கி வைத்தார். பெங்களூர் 4.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.
கோஹ்லி 28 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கிறிஸ் கெய்ல் 26 பந்தில் 50 ரன்னைத் எடுத்தார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய கெய்ல் 32 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார். கெய்ல் அவுட்டாகும்போது பெங்களூர் அணி 11 ஓவரில் 147 ரன்கள் குவித்திருந்தது.
அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். விராட் கோஹ்லி 47 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சர் உடன் சதம் அடித்தார். இந்த சீசனில் விராட் கோஹ்லி அடிக்கும் 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய கோஹ்லி 50 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 113 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டி பஞ்சாப் களமிறங்கியது. ஆனால் பஞ்சாப் வீரர்களால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. அதிகப்பட்சமாக சகா மட்டுமே 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். கேப்டன் விஜய் 16 ரன்கள் எடுத்து அரவிந்த் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சதம் அடித்த விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.