சூதாட்ட புகார்
இதன் மூலம் பி.சி.சி.ஐ.க்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் அத்துடன் பிரச்சினையும் சேர்ந்து வந்துள்ளது. ஐ.பி.எல். போட்டியை வைத்து பெருமளவு சூதாட்டம் நடைபெறுவதாக காலம், காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வளவு ஏன், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக வீரர்களே சிக்கினர்
சூதாட்ட நிறுவனத்தில் முதலீடு
இந்த சூதாட்ட பிரச்சினையிலிருந்து வெளியே வர பி.சி.சி.ஐ. படாத பாடு பட்டது. ஆனால், ஐ.பி.எல். அணியே சூதாட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் எப்படி இருக்கும். அது தான் அகமதாபாத் அணியை வாங்கிய சி.வி.வி. கேபிட்டல் நிறுவனத்தில் நடக்கிறது. அமெரிக்காவில் செயல்படும் சூதாட்ட நிறுவனத்தில் சி.வி.சி. கேபிட்டல் முதலீடு செய்துள்ளது.
அகமதாபாத் அணி மீது விசாரணை
இதனால் இந்த அணிக்கு அனுமதி அளித்தால் ஐ.பி.எல். மீதான நம்பகத்தன்மை போய்விடும் என கருதப்பட்டது. இதனையடுத்து, இந்த புகார் குறித்து விசாரிக்க, பி.சி.சி.ஐ. முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தது. இந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் சி.வி.சி. கேபிட்டல் அணியின் எதிர்காலம் இருக்கும் என கருதப்பட்டது
தள்ளி போகும் ஐ.பி.எல்.ஏலம்?
இந்த நிலையில், சி.வி.சி. நிறுவனத்திற்கு ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கலாம் என அந்த குழு பி.சி.சி.ஐ.யிடம் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து, புதிய அணிக்கு அனுமதி வழங்குவதா, வேண்டாமா என்ற தலைவலியில் பி.சி.சி.ஐ. உள்ளது. இதனால் ஐ.பி.எல் வீரர்களின் மெகா ஏலம் சிறிது காலம் தள்ளி வைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.