சென்னை நிலை என்ன?
இந்த ஏலத்துக்கு முன்னர் மற்ற அணிகள் அனைத்தும் நிறைய வீரர்களை விடுவித்தன. அதனால் நிறைய வீரர்களை வாங்க முடிந்தது. சென்னை அணி மிகச் சில வீரர்களை மட்டுமே விடுவித்தது. அணியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் யாரும் சரியாக அமையாத சூழ்நிலை இருந்தது. அதற்காக நல்ல பந்துவீச்சாளரை வாங்க முடிவு செய்திருந்தது சென்னை அணி.
ஏலத்தில் போராடிய சென்னை
ஜெயதேவ் உனட்கட் மற்றும் முஹம்மது ஷமிக்காக ஏலத்தில் மற்ற அணிகளோடு கடுமையாக மோதியது சென்னை. எனினும், மற்ற அணிகள் அவர்களை வாங்கினர். வீரர்களை வாங்க சென்னை அணியிடம் 8.40 கோடி மட்டுமே இருந்தததால் பெரிய தொகைக்கு ஏலம் கேட்க முடியாத சிக்கலில் இருந்தது சென்னை. இந்த நிலையில் தான் மோஹித் சர்மாவை 5 கோடிக்கும், ருதுராஜ்-ஐ அடிப்படை விலை 20 லட்சத்துக்கும் வாங்கியது சென்னை அணி.
மீண்டும் மோஹித் சர்மா
மோஹித் சர்மா 2013 முதல் 2015 வரை சென்னை அணிக்காக ஆடியவர். சென்னை அணி தடை செய்யப்பட்டு மீண்டும் சென்ற சீசனில் வந்த போது ஏலத்தில் முடிந்த வரை தன் பழைய அணியை சேர்ப்பதில் முனைப்பாக இருந்தது. அப்போது மோஹித் சர்மாவை வாங்க முடியவில்லை. கடந்த சீசனில் மோஹித் பஞ்சாப் அணிக்காக ஆடினார். ஆனால், இந்த முறை சென்னை அணி போராடி அவரை 5 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் சென்னைக்கு நல்ல பந்துவீச்சாளர் கிடைத்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் யார்?
ருதுராஜ் கெய்க்வாட் மாநில அளவிலான வீரர் ஆவார். இதுவரை வெறும் 5 உள்ளூர் டி20 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார் இந்த வீரர். அதில் 137 ஸ்ட்ரைக் ரேட்டில், 137 ரன்கள் குவித்துள்ளார். இவர் சென்னை அணியில் கூடுதல் வீரராக இருப்பாரே ஒழிய இவருக்கு களம் இறங்கும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம்.