2020 ஐபிஎல் ஏலம்
2020 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.60 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்றது. ஐந்து வீரர்கள் வரை அணியில் தேர்வு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்பு இருந்தது.
சிஎஸ்கே திட்டம்
சென்னை அணியில் சரியான துவக்க வீரர் ஒருவர், வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் ஆகியோர் தான் முக்கியத் தேவைகளாக இருந்தது. அதோடு மிடில் ஆர்டரை பலப்படுத்தும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் வீரர் கிடைத்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்ற நிலை இருந்தது.
ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன்
இந்த நிலையில், ஏலத்தில் இங்கிலாந்து இளம் ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன்-ஐ வாங்கி அசத்தியது சிஎஸ்கே. சாம் கர்ரன்-ஐ 5.50 கோடிக்கு வாங்கியது. இது நல்ல தேர்வாக பாராட்டைப் பெற்றது.
பியுஷ் சாவ்லாவுக்கு கடும் போட்டி
அடுத்து பல நல்ல வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் போது அமைதியாக இருந்த சிஎஸ்கே அணி, சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா பெயர் வந்த போது அதிரடியாக பஞ்சாப் அணியுடன் போட்டி போட்டு ஏலம் கேட்டது. பின்னர் 6.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
வேகத்துக்கு ஜோஷ் ஹேசல்வுட்
அடுத்து கையில் 2.35 கோடி மட்டுமே இருந்த நிலையில், ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டை எந்த போட்டியும் இன்றி அவரது அடிப்படை விலை 2 கோடிக்கு வாங்கியது. இவருக்கு யாரும் போட்டி போட்டு இருந்தால், சிஎஸ்கே அணியால் பணம் இல்லாத காரணத்தால் இவரையும் வாங்கி இருக்க முடியாது.
தமிழக வீரர் சாய் கிஷோர்
பின்னர், தமிழக வீரர் ஆர்.சாய் கிஷோரை அவரது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியது சிஎஸ்கே. சாய் கிஷோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இவருக்கு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது, இடத்தை நிரப்பவே வாங்கப்பட்டார் என்றே கூறப்படுகிறது.
அதிக தொகை
கடந்த சீசனில் தங்கள் அணியில் ஆடிய பியுஷ் சாவ்லாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நீக்கி இருந்தது. இதுவரை ஐபிஎல் ஏலத்தில் அவரது அதிகபட்ச ஏலத் தொகையே 4.25 கோடி தான். எனினும், அவரை 6.75 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே அணி.
சாவ்லா தேவையா?
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், கரன் சர்மா என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை வாங்கி இருப்பதும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.