ஐபிஎல் ஏலம் எப்படி?
கேள்வி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஐபிஎல் 2020 ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து உங்கள் எண்ணங்கள் என்ன? நீங்கள் எதிர்பார்த்தது போல இருந்ததா?
சாய் கிஷோர்: ஆம், ஏலத்தின் போது சில அணிகள் என்னை வாங்க முற்படுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், சிஎஸ்கே என்னை தேர்வு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு சிறப்பான உணர்வு, ஏனெனில், என் குழந்தை பருவத்திலிருந்தே நான் சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி வருகிறேன். இப்போது சிஎஸ்கே அணியின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் சிறப்பானது.
கேள்வி : ஏலத்தில் எந்த குறிப்பிட்ட அணியாவது உங்களை வாங்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
சாய் கிஷோர் : இல்லை, அது போன்ற எந்த விருப்பமும் இல்லை. ஏதேனும் ஒரு அணி என்னைத் தேர்ந்தெடுக்கும், அது என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நான் உறுதியாக இருந்தேன்.
மனதில் என்ன இருந்தது?
கேள்வி : தொலைக்காட்சியில் ஏலத்தை பார்த்தீர்களா? ஏலத்தின் முதல் சுற்றில் நீங்கள் விற்கப்படாதபோது உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டு இருந்தது?
சாய் கிஷோர் : ஆமாம், நான் அதை பார்த்துக் கொண்டு இருந்தேன். முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்படாத போது, முதலில் ஏமாற்றமடைந்தேன். எந்த அணியும் என்னை தேர்வு செய்யவில்லையே என்று நான் யோசித்தேன். ஆனால், என்னை நம்புங்கள், இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கவில்லை. அது ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தது. பின்னர், என் பெயர் இரண்டாவது முறையாக ஏலத்தில் வந்தபோது, இந்த முறை நான் தேர்வு செய்யப்படுவேன் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். மேலும், சிஎஸ்கே என்னை ஏலத்தில் தேர்வு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
தோனியுடன் எப்படி அறிமுகம் செய்வீர்கள்?
கேள்வி : ஐபிஎல் 2020 சீசனில் 'தல' தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அதைப் பற்றி நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள்? அவரிடம் உங்களை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்பதற்கான திட்டங்கள் ஏதும் உள்ளதா?
சாய் கிஷோர் : இல்லை, அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. என் சிஎஸ்கே கேப்டன் ஒரு ஜாம்பவான் என்பதால் அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்வேன் என்று நினைக்கிறேன்.
சிஎஸ்கே ஸ்பின்னர்கள்
கேள்வி : சிஎஸ்கே அணியைப் பார்த்தால், ஏற்கனவே ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, கரன் ஷர்மா என ஏற்கனவே தரமான ஸ்பின்னர்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு பியுஷ் சாவ்லாவை வாங்கியுள்ளனர். எனவே உங்களைப் போன்ற ஒரு இளம் வீரருக்கு அவர்களுடன் பழகுவதற்கும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் இது எவ்வளவு பெரிய வாய்ப்பு?
சாய் கிஷோர் : உண்மையில், நான் ஒரு முழுமையான வீரனாக என்னைப் பார்க்கவில்லை. நான் தொடர்ந்து கற்க வேண்டும் என்பதை நிறைய நம்புபவன். எனவே, என்னைப் பொறுத்தவரை, இதுபோன்ற மூத்த வீரர்கள் தங்கள் வேலையை எவ்வாறு செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். மேலும், அவர்களுடன் பழகுவதன் மூலம் என்னால் முடிந்தவரை கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். இதுபோன்ற நிரூபிக்கப்பட்ட மேட்ச் - வின்னர்களுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது எனக்கு ஒரு சாதகமான விஷயம், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
வாய்ப்பு கிடைக்குமா?
கேள்வி : ஏற்கனவே இதுபோன்ற பெரிய மேட்ச் வின்னர்கள் இருப்பதால், நீங்கள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும் என்று நினைக்கிறீர்களா? அதைப் பற்றி நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?
சாய் கிஷோர் : நான் இதைப் பற்றி யோசிக்கவில்லை, ஆனால் எனது செயல்திறனில் கவனம் செலுத்த விரும்புகிறேன், மற்றவற்றை அணி நிர்வாகத்திடம் விட்டுவிட விரும்புகிறேன். நான் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை. இது எனது அறிமுக சீசன். ஆனால், உள்ளூர் போட்டிகளில் நான் என்ன செய்தேனோ, கற்றுக்கொண்டேனோ, அதன் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் எனது சிறப்பான பங்களிப்பை தருவேன் என்று நம்புகிறேன்.
அஸ்வினுடன் பழகும் வாய்ப்பு?
கேள்வி : சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகளின் போது அஸ்வினுடன் உரையாட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?
சாய் கிஷோர் : உண்மையில், அவருடன் பேசுவதற்கு எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் தனது சர்வதேச போட்டிகளில் மிகவும் பிஸியாக இருந்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் போன்ற அணியின் மற்ற மூத்த வீரர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் கிடைத்துள்ளது. நான் ஆடும் போது, பயிற்சியாளர் ராமசாமி பிரசன்னா கூட எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தார்.
தினேஷ் கார்த்திக் செய்த உதவி
கேள்வி : ஒரு சுழற்பந்து வீச்சாளரின் வெற்றியில் ஒரு விக்கெட் கீப்பர் முக்கிய பங்கு வகிக்கிறார். தினேஷ். கார்த்திக் போன்ற ஒரு விக்கெட் கீப்பர், பந்து வீச்சாளராக முன்னேற உங்களுக்கு எப்படி உதவினார்?
சாய் கிஷோர் : 2019 சையத் முஷ்டாக் அலி டிராபியின் போது, தினேஷ் கார்த்திக் எனக்கு பந்துவீச்சு குறித்து நிறைய டிப்ஸ் கொடுத்தார். ஒரு பேட்ஸ்மேன் ஆடுகளத்தில் ஏதாவது செய்யும்போது என்ன செய்வது என்பது குறித்து அவர் என்னுடன் நிறைய யோசனைகளைப் பகிர்ந்து கொண்டார், அந்த டிப்ஸ்கள் எனக்கு நிறைய உதவின. டிஎன்பிஎல் நாட்களில் இருந்தே அவர் என்னை ஊக்குவித்து வருகிறார். விஜய் ஹசாரே டிராபியில், அவர் முக்கியமான ஓவர்களைக் கொடுத்து என்னை ஆதரித்தார். சையத் முஷ்டாக் டிராபியில், எனது பெரும்பாலான ஓவர்களை பவர் பிளேயில் தான் வீசினேன். அவர் என் மீதுள்ள நம்பிக்கை வைத்ததால், நான் நன்றாக செயல்பட்டேன். எனவே, அவர் எப்போதும் என் மீது நம்பிக்கை காட்டி, என் திறமைகளை ஆதரித்தார். அது எனக்கு முன்னேற உதவியது. எனவே நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
விஜய் சங்கர் கேப்டன்சி
கேள்வி : ரஞ்சி டிராபியில் விஜய் சங்கர் மற்றும் அவரது கேப்டன்சி குறித்து உங்கள் எண்ணம்?
சாய் கிஷோர் : எனக்கு விஜய்யை சில காலமாக மட்டுமே தெரியும். நான் அவருக்கு கீழ் தான் அறிமுகமானேன். நீங்கள் ஒரு முடிவைக் கண்டால் அல்லது ஒரு யோசனையை சொல்ல வேண்டும் என்றால் நான் எளிதாக தொடர்பு கொள்ளக் கூடிய நபர் அவர் தான். நீங்கள் ஒரு சராசரியான ஆட்டம் ஆடி சோர்ந்து இருந்தால், அவரிடம் நீங்கள் சென்று எளிதாக பேச முடியும். அவர் மிகவும் எளிதாக அணுகக்கூடியவர். வேலையில் அவரது ஒழுக்கம், அவர் வீரர்களைக் கையாளும் விதம், போன்றவற்றை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர் இதுவரை ஒரே ஒரு போட்டியில் தான் தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்துள்ளார். எனவே, அவர் கேப்டன்சி பற்றி சொல்ல முடியாது.
போட்டிக்கான திட்டங்கள்
கேள்வி : ஒரு விளையாட்டில் உங்கள் திட்டங்கள் சரியாக அமையாத போது எப்படி நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள்? உதாரணமாக ஒரு பேட்ஸ்மேன் உங்களுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை அடித்திருந்தால். உங்களை அமைதியாக வைத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
சாய் கிஷோர் : அது நீங்கள் எவ்வாறு தயார் ஆகிறீர்கள் என்பது பற்றியது என நான் நினைக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உங்கள் மனதில் ஒரு தீர்வு இருக்கும். அடுத்த திட்டத்திற்கு மாறலாம். எதிரணி எழுப்பும் கேள்விகளுக்கான பதில்கள் உங்களிடம் இல்லாதபோது தான் உங்களுக்கு அழுத்தம் வரும். நாங்கள் ஒரு பந்து வீச்சாளர்களாக வலைப் பயிற்சியில் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கும் பயிற்சி செய்கிறோம். நீங்கள் பயிற்சியில் தயார் செய்து கொண்டால், மோசமான சூழ்நிலையில் கூட சிறப்பாக ஆட முடியும். இது போன்ற வெளிப்புற விஷயங்கள் என்னைப் பாதிக்காதபடி, நான் பயிற்சியில் என்னை தயார் செய்து கொள்கிறேன்.
அதிக விக்கெட் எடுத்தது பற்றி..
கேள்வி : சையத் முஷ்டாக் அலி டிராபியில் நீங்கள் அதிக விக்கெட் எடுத்தவர். அந்த செயல்பாடுகள் உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறதா அல்லது அடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற அழுத்தத்தை தருகிறதா?
சாய் கிஷோர் : நான் அதை அப்படி நினைக்கவில்லை. பட்டியல்களில் முன்னணியில் இருப்பது பெருமையான விஷயம். எனது கடின உழைப்புக்கான பலன் கிடைப்பதாக நான் கருதுகிறேன். அது எனக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் அளிக்கவில்லை. சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில் தமிழகத்திற்காக சிறப்பாக ஆட முடிந்ததற்கும், அதிலிருந்து நம்பிக்கையைப் பெற்றதற்கும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பல நாள் டெஸ்ட் போட்டிகளுக்கும் இதைத் தொடர விரும்புகிறேன்.
மனிதர்களை ஆராதிப்பவன் அல்ல
கேள்வி : நீங்கள் எந்த கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் உத்வேகம் பெறுகிறீர்கள்?
சாய் கிஷோர் : என் குழந்தை பருவத்தில் நான் அதை நிறைய செய்தேன், ஆனால் நான் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக ஆனபோது அதை நிறுத்தி விட்டேன். நான் மனிதர்களை ஆராதிப்பவன் அல்ல. ஒவ்வொரு நாளும் நான் என்னுடன் போட்டியிட்டு முன்னேற முயற்சிக்கிறேன். அதுதான் எனது ஒரே சவால்.
இந்திய அணி வாய்ப்பு
கேள்வி : சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சிறப்பாக விளையாடிய பிறகு பல வீரர்கள் தேசிய அணியில் நுழைவதை கண்டிருக்கிறோம். சிஎஸ்கேவுக்கு விளையாடுவது மட்டுமே ஒருவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லுமா? அல்லது அந்த வீரரின் கடின உழைப்பு இந்திய அணியில் நுழைய உதவுமா?
சாய் கிஷோர் : வீரரின் முயற்சி மற்றும் அணி, இரண்டுமே என என்று நான் நினைக்கிறேன். நீங்கள் இரண்டு விஷயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது இரண்டின் கலவையாகும். ஏனெனில், வீரர் (சிஎஸ்கே-வின் வீரர்) சிறப்பாக செயல்படுகிறார். அதனால் அந்த அணி சிறப்பாக செயல்படுகிறது. அதனால், அவர்கள் (சிஎஸ்கே வீரர்கள்) தேர்வாளர்களால் கவனிக்கப்படுவார்கள்.
புது ஆண்டு தீர்மானம்
கேள்வி : புதிய ஆண்டிற்கான ஏதேனும் தீர்மானங்கள் உள்ளதா?
சாய் கிஷோர் : தீர்மானங்களை நான் நம்பவில்லை. ஆனால், எனது திட்டங்களை நீங்கள் கேட்டால், நான் முன்பு கூறியது போல், ஒவ்வொரு நாளும் என்னை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து செயல்படுவேன். நான் இன்று இருப்பதை விட நாளை தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் சிறந்த நபராக இருக்க விரும்புகிறேன்.
கேள்வி : நீங்கள் கிரிக்கெட் விளையாடாத போது, ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?
சாய் கிஷோர் : நான் கிரிக்கெட்டில் மிகவும் அதிக நேரம் ஈடுபட்டுள்ளேன். ஆனால், நான் ஓய்வாக இருக்கும்போது நிறைய புத்தகங்களைப் படிப்பேன், திரைப்படங்களுக்கு செல்வேன், என் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் என் செல்ல நாயுடனும் நேரத்தை செலவிடுகிறேன். நாய்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.