பெங்களூரு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டும், இந்திய அணியில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டும் வந்த யுவராஜ்சிங்கை ரூ.16 கோடி கொடுத்து வாங்கியுள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ்க் அணிக்காக விளையாடி வந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜயை பஞ்சாப் அணி ரூ.3 கோடிக்கு வாங்கியுள்ளது.
8வது ஐபிஎல் சீசனுக்கான, வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. ஏலத்தில் முதல் வீரராக சென்னைக்காக விளையாடி வந்த முரளி விஜய் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஏலம்போனார். தமிழகத்தை சேர்ந்தவரான முரளி விஜய் சென்னை அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கலக்கி வந்தவராகும்.
இந்த ஏலத்தில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால், யுவராஜ்சிங்கை ரூ.16 கோடிக்கு டெல்லி அணி வாங்கியதுதான். யுவராஜ்சிங்கை பெங்களூரு அணி கடந்த ஏலத்தின்போது ரூ.14 கோடி கொடுத்து வாங்கியது. அந்த ஏலத்தின்போது அதிக தொகை பெற்றவர் என்ற பெருமையை யுவராஜ்சிங்தான் பெற்றார். ஆனால் மோசமான ஃபார்ம் காரணமாக, அவரை கழற்றிவிட்டது பெங்களூரு அணி.
உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அடிமேல் அடிபட்டுக் கொண்டிருந்த யுவராஜ்சிங்கை 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் டெல்லி அணிக்காக விளையாடிவந்தார். அவரை டெல்லி அணி கழற்றிவிட்ட நிலையில் பெங்களூரு அணி ரூ.10.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச்சை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.3.2 கோடிக்கு வாங்கியுள்ளது. இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கனை ஹைதராபாத் அணி ரூ.1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
இலங்கை ஜாம்பவான்கள் மகிலா ஜெயவர்த்தனே, சங்ககாரா ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. அதேநேரம் மேத்யூசை 7 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க நம்பிக்கை நட்சத்திரம் ஹசிம் ஆம்லாவுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.