பெங்களூர்: 10வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இதில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்சுக்கு கடும் டிமாண்ட் இருந்தது. இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.12 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது. இவ்வளவு பெரிய தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர் ஏலத்தில் எடுக்கப்பட்டது பிற வீரர்களை வாயை பிளக்க செய்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் இந்த ஆண்டு தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட முடியாத சூழல் உள்ள நிலையில், நல்ல ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலையில் இருந்தது பெங்களூர் அணி. எனவே இடது கை வேகப்பந்து வீச்சாளரான தைமல் மில்சை அந்த அணி 12 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
தைமல் மில்ஸ் அதிவேகமாகவும், அதி ஸ்லோவாகவும் பந்து வீசி பேட்ஸ்மேன்களை குழப்புவதில் வல்லவர். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இவரது பந்து வீச்சு பேட்ஸ்மேன்களை திணறடித்தது குறிப்பிடத்தக்கது.