முடங்கிய கிரிக்கெட் தொடர்கள்
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு சர்வதேச அளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் முடங்கியுள்ள நிலையில், சர்வதேச அளவிலான பல தொடர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளன. அவை ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கேள்விக்குள்ளான டி20 உலக கோப்பை
இந்நிலையில், இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கிவரும் ஐபிஎல் சீசன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவை மேலும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோல அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடத்தப்பட உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் திட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத பட்சத்தில் இந்த இரு தொடர்களையும் மூடிய அரங்கத்திற்குள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தவும் நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு சர்வதேச அளவில் பல வீரர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளிட்டவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். எதுவாகிய போதிலும், வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள தற்போதைய காலத்தில் முடிவை ஒத்திவைக்கவே நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
க்ளென் மாக்ஸ்வெல் திட்டவட்டம்
இதனிடையே, மூடிய அரங்கத்திற்குள் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை வேண்டுமானால் நடத்திக் கொள்ளலாம். ஆனால் டி20 உலக கோப்பையை அவ்வாறு ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.