ஐ.பி.எல் திருவிழா
இதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகிறன்றன. இதுவரை மொத்தம் 29 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதி 31 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இன்றைய 30-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோதாவில் குதிக்கின்றன. ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை நடந்த 7 ஆட்டங்களில் 4 வெற்றியும், 3 தோல்வியும் பெற்று 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்து இருக்கிறது.
சென்னை-மும்பை
5 முறை சாம்பியனாக ஐ.பி.எல்.லில் கிங் ஆக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியில் திறமையான வீரர்கள் கொட்டி கிடக்கின்றனர். இந்த தொடரில் 4-வது இடத்தில் இருக்கும் மும்பை தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டும். கேப்டன் ஹிட் மேன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் குயிட்டெண்டன் டி காக், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷான், சூர்யகுமார் என்று மும்பை அணியில் அதிரடி சூரர்களுக்கு பஞ்சம் இல்லை. பவுலிங் டிபார்ட்மெண்டில் உலகின் எந்த பேட்ஸ்மேனையும் நடுங்க வைக்கும் பும்ரா, டிரண்ட் போல்ட், சுழற்பந்து சூறாவளி ராகுல் சாகர் சென்னை பேட்ஸ்மேன்களை சோதிக்க காத்திருக்கின்றனர்.
மிஸ்டர் கூல் தோனி
சென்னையை அணியை எடுத்துக் கொண்டால் கடந்த சீசனில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆனால் இந்த முறை 7 போட்டியில் 5-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-ம் இடத்தில் அசுர பலத்துடன் இருக்கிறது. தொடக்க வீரர்கள் பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, வெய்ன் பிராவோ இதுதவிர கேப்டன் மிஸ்டர் கூல் தோனி என்று தரமான பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பந்துவீச்சில் தீபக் சாகர், நிகிடி, ஜடோஜா, பிராவோ, இம்ரான் தாஹிர் மிரட்ட தயாராக இருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சென்னை அணி விரைவில் பிலே ஆப் சுற்றுக்கு நுழைந்து விடலாம்.
பலம், பலவீனம் என்ன?
இனி இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை பார்ப்போம். சென்னை அணியில் கேப்டன் கூல் தோனி மிகப்பெரும் பலம். ஓப்பினிங் வீரர் பிலிஸ்சிஸ், கெய்க்வாட் தரமான பார்மில் உள்ளனர். இந்த தொடரில் 7 ஆட்டங்களில் 4 அரைசத்தத்துடன் 320 வைத்துள்ளார் பிலிஸ்சிஸ். ஆனால் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால் சென்னை அணிக்கு கொஞ்சம் பலவீனமாகும். மற்றபடி சென்னை அணிக்கு எல்லாமே ஓக்கேதான். கேப்டன் தோனி கொஞ்சம் பார்மில் இல்லாமல் திணறுவது பலவீனமாக பார்க்கப்படுகிறது. அவரை பழைய தோனியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். கொரோனா தனிமை காரணமாக ஆல்ரவுண்டர் சாம் கரன் இந்த ஆட்டத்தில் விளையாடாதது சற்று பின்னடைவுதான். அதே வேளையில் பிராவோ, ஜடோஜா எனும் ஆள்ரவுண்டர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
ஹிட்மேன் ரோகித் சர்மா
மும்பை அணியில் கேப்டன் ஹிட்மேன் ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சதம் அடித்து புது தெம்புடன் களம் இறங்குகிறார். அவர் அணிக்கு மிகபெரும் பலம். விக்கெட் கீப்பர் டி காக் பேட்டிங்கில் ரன் சேர்க்க தடுமாறுவது பலவீனமாகும். இதேபோல் நடுவரிசை வீரர் இஷான் கிஷானும் திணறி வருவது பலவீனமாகும். அதே வேளையில் அரசு வேட்டைகாரார் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் பலமாக இருக்கின்றனர். வேகப்பந்து சூரர்கள் பும்ரா, போல்ட் இருப்பது மும்பை மணிக்கு எப்போதும் பலமாகும். இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராகுல் சாஹரும் பலம் சேர்க்கிறார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடரில் ரசிகர்கள் நேரடியாக பார்க்க அனுமதிக்கப்பட இருக்கின்றனர். ரசிகர்களுக்கு இது ஒருபுறம் கொண்டாட்டம். அதே வேளையில் ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது வீரர்களுக்கும் புத்துணர்ச்சி, கூடுதல் பலம் கொடுக்கும். ஐக்கிய அரபு மைதானங்களை பொறுத்தவரை இந்திய, ஆசிய ஆணி வீரர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அங்கு எப்போதும் காலநிலை கடுமையாக இருக்கும் என்பதால் வெளிநாட்டு வீரர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். அடுத்த வருடம் இதே இடத்தில்தான் டி-20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளதால் மைதானத்தின் தன்மையை புரிந்து கொள்ள ஐபிஎல் வீரர்களுக்கு வசதியாக இருக்கும். இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நீண்ட காலத்துக்கு பிறகு போட்டிகள் நடப்பதால் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை காணலாம்.