டெல்லி: இந்திய சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் ஆட்டமே சறுக்கிவிட்டது. இளம் வீரர்களை கொண்ட 'இந்திய ஏ' அணியிடம், டிவில்லியர்ஸ், டுமினி போன்ற டி20 ஜாம்பவான்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி பயிற்சி டி20 ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று மண்ணை கவ்வியது.
மிக நீண்ட தொடரில் ஆடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. டெல்லியிலுள்ள பாலம் மைதானத்தில், மன்தீப் சிங் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய ஏ அணிக்கு எதிராக இன்று பயிற்சி டி20 ஆட்டம் நடந்தது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் டுமினி 32 பந்துகளில் 68 ரன்களையும், ஓப்பனர், ஏபிடி வில்லியர்ஸ் 27 பந்துகளில் 36 ரன்களையும், கேப்டன் டுப்ளசிஸ் 27 பந்துகளில், 42 ரன்களையும் குவிக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, 189 ரன்களை குவித்தது.
தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான பவுலிங் வரிசை கொண்ட அணிக்கு எதிராக சேஸ் செய்ய இது ஒரு பெரிய ஸ்கோர்தான். ஆனால், இந்திய தொடக்க வீரர்கள் மாயங்க் அகர்வாலும், மனன் வோராவும், எதைக்கண்டும் அஞ்சவில்லை. பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசிய இந்த ஜோடி 119 ரன்களை குவித்த நிலையில், வோரா 56 ரன்களில் அவுட் ஆனார்.
ஆனால் உத்வேகத்தை விடாத அகர்வால், தொடர்ந்து அடித்து ஆடினார். 49 பந்துகளில் 2 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் உதவியுடன் 87 ரன்கள் குவித்திருந்த நிலையில் அகர்வால் அவுட் ஆனார்.
ஆனால் மேற்கொண்டு விக்கெட்டுகளை விழ விடாமல் தடுத்த சஞ்சு சாம்சன் 31 ரன்களுடனும், மன்தீப் சிங் 12 ரன்களுடனும் 2 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் வெற்றி இலக்கை இந்திய ஏ அணி எட்ட உதவி செய்தனர்.