கடைசி ஓவர் த்ரில்லர்
19வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் சில சிங்கிள்கள், ஒரு இரட்டை ரன்கள் என மொத்தம் 11 ரன்கள் கிடைத்தது. எனவே கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவை என்ற நிலையில் மிட்சேல் ஜான்சன் அந்த ஓவரை வீசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, வெற்றியை வசப்படுத்த உதவினார்.
ஒவ்வொரு ரன்னும் முக்கியம்
1 ரன் வித்தியாசத்தில்தான் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்பட்டது என்பதால், ஒவ்வொரு சிறு தவறுமே கணக்கில் எடுக்கப்பட வேண்டியதாக இருந்தது. அப்படி ஒரு தவறுதான், 19வது ஓவரில் நடுவரால் இழைக்கப்பட்டது.
ஃபுல்டாஸ் வீசிய பும்ரா
19வது ஓவரின் 5வது பந்தை லாங் ஆப் திசையில் ஸ்மித் சிக்சராக விளாசினார். இதனால் பும்ரா பதற்றமடைந்தார். ரன்னை கட்டுப்படுத்த வேண்டுமே என நினைத்து, தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ, ஸ்மித்துக்கு உயரமான ஒரு ஃபுல்டாசை 6வது பாலாக வீசினார்.
நடுவருடன் வாக்குவாதம்
அந்த பந்தை ஸ்மித் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓடினார். ஆனால் நடுவர் நோ-பால் தருவார் என எதிர்பார்த்தார். நடுவர் நோ-பால் என அறிவிக்கவில்லை. இதனால் லெக்-அம்பயருடன் ஸ்மித் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் இடுப்புக்கு மேலே வந்த பந்தைத்தான் அடித்ததாக சைகை மூலம் திரும்ப, திரும்ப காட்டினார்.
ஃப்ரீ ஹிட்
ஒருவேளை அந்த பந்தை நோபாலாக அறிவித்திருந்தால், புனே அணிக்கு கூடுதலாக ஒரு ரன் கிடைத்திருக்கும் என்பதோடு, அது ஃப்ரீ ஹிட்டாகவும் கொடுக்கப்பட்டிருக்கும். ஃப்ரீ ஹிட் என்பதால் குறைந்தது 1 ரன் முதல் அதிகபட்சம் 6 ரன்வரை கிடைத்திருக்க வாய்ப்புகள் இருந்தன. ஏனெனில் அந்த பந்தை நன்கு பார்மில் இருந்த ஸ்மித்தான் சந்தித்திருப்பார்.
கிரிக்கெட் என்றால் அப்படித்தான்
நடுவரின் பிழையால் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது புனே அணி என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இது கிரிக்கெட். எப்போது வேண்டுமானாலும் போட்டியின் தன்மை மாறுவதே இதன் ஸ்பெஷல். எனவே நோபால் கொடுத்திருந்தாலும் புனே வென்றிருக்கும் என்று ஆண்டவனை தவிர யாராலும் உறுதியாக கூற முடியாது என்பதுதான் உண்மை.