டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் உட்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்து அனைவரையும் விடுவித்தது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது, இந்திய அணியின் முன்னணி வீரராக வலம் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் மற்றும் அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் உள்ளிட்டோர் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் 42 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உதவியாளர் சோட்டா ஷகீல் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து இன்று டெல்லி நீதிமன்றம் முடிவு செய்யவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் உட்பட 16 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை; ஆகையால் 36 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன; அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி அதிரடியாக தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த், இன்றைய நாள் மிகவும் உணர்ச்சிகரமான நாள்.... என்னுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் மிக்க நன்றி. மீண்டும் எனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்குவேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் சாண்டிலா கூறுகையில், பிக்ஸிங் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது; என் மீது குற்றம்சாட்டப்பட்டதை மோசமான கனவாக கருதுகிறேன் என்றார்.