அணிகளுக்கு கட்டுப்பாடுகள்
ஐபிஎல் 2020 போட்டிகள் இந்த ஆண்டு யூஏஇயில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளன. இதையொட்டி வரும் 20ம் தேதி வீரர்கள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள ஐபிஎல் நிர்வாகிகள் குழு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்வகையில் அணிகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நட்சத்திர ஹோட்டல்களில் வீரர்கள்
யூஏஇயில் 5 நட்சத்திர ஹோட்டல்களில் வீரர்கள் தங்க வைக்கப்பட்டால், அவர்களுக்கென பிரத்யேகமான இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் மற்றவர்களுடன் இருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்றும் ஆடும் மைதானங்களுக்கு அருகில் ஹோட்டல்கள் இருக்க வேண்டும் என்றும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அணிகள் திட்டம்
இந்நிலையில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வீரர்களை தங்க வைப்பதற்கு பதிலாக ரெசார்ட்களில் தங்க வைக்க ஐபிஎல் அணிகள் திட்டமிட்டு வருகின்றன. ஏசி அறைகளில் கொரோனா வேகமாக பரவும் என்று கூறப்படும் நிலையில், 5 நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்துவிட்டு மாற்று ஏற்பாடுகளை அணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்களை அமைக்க முடிவு
இதுதொடர்பாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கோல்ப் ரெசார்ட்டில் வீரர்களை தங்க வைக்க ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அபுதாபியில் முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் ஒரு முழு அபார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.