48வது பிறந்த தினம்
முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தன்னுடைய 48வது பிறந்ததினத்தை இன்று எளிமையாக கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா டுடேவின் இன்ஸ்பிரேஷன் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
கங்குலி திட்டவட்டம்
கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ முன்னுரிமை அளித்து வருவதாகவும் இந்த ஆண்டு ஐபிஎல் இல்லாமல் முடிவு பெறாது என்றும் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஐசிசி முடிவுக்கு காத்திருப்பு
கிரிக்கெட் போட்டிகள் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ள கங்குலி, வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை குறித்து ஐசிசி தனது முடிவை வெளியிட்ட பின்பே ஐபிஎல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடத்த முன்னுரிமை
பிசிசிஐயின் முன்னுரிமை ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கே என்றும் இடையில் 35, 40 நாட்கள் கிடைத்தாலும் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்து விடுவோம் என்றும் அவர் மேலும் கூறினார். அந்த தொடர் எங்கே நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவில் நடத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிக செலவாகும்
நியூசிலாந்து, இலங்கை யூஏஇ ஆகிய நாடுகள் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதலில் ஐபிஎல்லை இந்த ஆண்டிற்குள் நடத்த வேண்டும், 2வது இந்தியாவில் நடத்த வேண்டும் 3வதாக மட்டுமே மற்ற நாடுகளில் நடத்துவது குறித்து திட்டமிடப்படும் என்றும் சவுரவ் கூறினார். வெளிநாடுகளில் நடத்துவது அதிகப்படியான செலவை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் இயல்புக்கு திரும்ப வேண்டும்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நிலவிய நிலையில் தற்போது தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஆனால், அனைத்திலும் ஒரு அச்சம் காணப்படுகிறது என்று குறிப்பிட்டார். முதலில் மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்ப வேண்டும், பின்பு கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும், ஐபிஎல் நடக்க வேண்டும் என்றும் கங்குலி தெரிவித்தார்.