ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக குறைந்த ஓவர்கள் தொடர்கள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான் பங்கேற்று ஆடவுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரையடுத்து அவருக்கு ரோடேஷன் திட்டத்தின்படி ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மனதிற்கு உற்சாகம்
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இந்த ரோடேஷன் பாலிசி குறித்து குர்ரான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன்மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியாக உணர்வதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். பயோ பபள் முறை மிகவும் கடுமையானதாக உள்ள நிலையில் இந்த பாலிசி மனதிற்கு உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தோனியின் நன்மதிப்பு
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக கேப்டன் தோனியின் நன்மதிப்பை பெற்ற வீரராக திகழ்ந்தார் சாம் குர்ரான். அவருக்கு அணியில் துவக்க வீரர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை தந்து சோதித்து அதில் வெற்றியும் பெற்றார் தோனி. தன்னுடைய ஆல்-ரவுண்டர் திறமையை அனைத்திலும் வெளிப்படுத்தினார் குர்ரான்.
சிறப்பான வீரராக உணர்கிறேன்
இந்நிலையில் ஐபிஎல்லில் தான் பெற்ற இந்த அனுபவமே தனக்கு மிகவும் சிறப்பாக கைக்கொடுத்து வருவதாக சாம் குர்ரான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த தொடரில் தனக்கு பல்வேறு சவால்கள் மற்றும் பொறுப்புகள் தரப்பட்டதாகவும் இதையடுத்து தான் மிகவும் சிறப்பான வீரராக உணர்வதாகவும் உலகிலேயே சிறப்பான டி20 தொடர் ஐபிஎல் தான் என்றும் அவர் மேலும் கூறினார்.