பிசிசிஐ விதிமுறைகள்
வீரர்களை தக்கவைப்பது குறித்து பிசிசிஐ ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். அதில் குறைந்தபட்சம் ஒரு அயல்நாட்டு வீரரும், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும் இடம் பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வரும் அக்டோபர் 30 தேதிக்குள் சமர்பிக்கவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே திட்டம்
அந்தவகையில் எம்.எஸ்.தோனி முதல் வீரராக தக்கவைக்கப்போவதாக சிஎஸ்கே அணி பகிரங்கமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் டுவைன் பிராவோவும் தக்கவைக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டுவைன் பிராவோ, ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதில் குழப்பம் நீடித்தது. ஆனால் நிச்சயம் அவர் இருப்பார் என சிஎஸ்கே செயல் தலைவர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
காசி விஸ்வநாதன் உறுதி
இதுகுறித்து பேசிய அவர், டுவைன் பிராவோ நிச்சயம் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார். இன்னமும் அவர் முழு உடற்தகுதியுடனும், அதே திறமையுடனும் தான் இருக்கிறார் எனக் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். எனினும் பிராவோவை சிஎஸ்கே தக்கவைக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மழுப்பிவிட்டார்.
பிராவோ தக்கவைப்பா?
பிராவோ அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருப்பார். ஆனால் அவர் சிஎஸ்கேவுக்காக தான் விளையாடுவாரா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. அவர் முக்கியமான வீரர்தான். இல்லையென்று கூறவில்லை. ஆனால் எங்களால் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தான் தக்கவைக்க முடியும். அது எப்படி அமையப்போகிறது என்பதை அடுத்த வாரத்திற்குள் நீங்கள் அறிவீர்கள் எனக்கூறிவிட்டார். இதன்மூலம் சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் ஒரே ஒரு அயல்நாட்டு வீரராக பிராவோ இருக்கலாம் எனத் தெரிகிறது.