இளம் வீரருக்கு சோகம்
பல இளம் வீரர்களுக்கும் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு வீரர் மட்டும் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். அதுவும் சிஎஸ்கே அணி செய்த தவறால் தான் அப்படி ஆனது என்றால் நம்ப முடிகிறதா?. கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்பா கௌதம் தான் அது. தொடக்கத்தில் நன்கு போட்டியுடன் ஆரம்பித்த இவரின் ஏலம் சிறிது நேரத்திலேயே முடிந்து அதிர்ச்சி கொடுத்தது.
குறைந்த பணம்
ரூ. 50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் களமிறங்கிய அவரை முதலில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் ஏலம் எடுக்க பணத்தை அதிகரித்தன. ஆனால் அதனை ஒரே ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ள இறுதியில் லக்னோ அணி ரூ.90 லட்சத்திற்கு கிருஷ்ணப்பா கௌதமை வாங்கியது. இது அவருக்கு பல மடங்கு நஷ்டமாகும்.
சிஎஸ்கே செய்த துரோகம்
கடந்தாண்டு இதே கிருஷ்ணப்பா கௌதமை ரூ. 9 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் அதிகபட்ச தொகைக்கு சென்றவர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் அவருக்கு கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட கேப்டன் தோனி விளையாட வாய்ப்பு தரவில்லை. ரூ. 9 கோடி கொடுத்து எடுத்தும், விளையாட விடாமல் வெளியே உட்காரவைத்தது. இதனால் அவரின் திறமையை நிரூபிக்க முடியாமல் இந்தாண்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரெக்கார்ட்
33 வயதாகும் ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கௌதம் ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு அனுபவமிக்கவர். கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு, அதன் பின்னர் 2021ம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு சென்றார். இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வாய்ப்பு கிடைக்காததே இவரின் ரெக்கார்ட் குறைவாக இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.