காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த அட்டவணையில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
தொடரை நடத்த அவசியம் என்ன?
இந்நிலையில், அதிகமான நிதி கையாளப்படும் இடமாக ஐபிஎல் தொடர் விளங்குகிறது. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர். அதிகமான பணம் இங்கு விளையாடுகிறது. வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைவரும் ஐபிஎல்லை விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உள்ள நிலையிலும் இந்த தொடரை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று பல்வேறு தரப்பினர் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
வீரர்களுக்கும் வரிகட்டவும் பயன்படுகிறது
இதனிடையே, ஐபிஎல்லில் பெறப்படும் நிதி அனைத்தும் வீரர்களுக்கும் வரிப்பணம் உள்ளிட்டவை வாயிலாக அரசுக்கும் தான் செலவிடப்படுவதாகவும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பொருளாளரான தனது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்று அருண்குமார் துமால் தெரிவித்துள்ளார்.
வீரர்களின் நலனில் அக்கறை
விளையாட்டிற்காக அரசு செலவிட வேண்டிய நிலையில், ஐபிஎல் மூலமாக அரசுக்கு பணம் வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்புபவர்கள் மகிழ்ச்சி தான் அடையவேண்டும் என்றும் துமால் குறிப்பிட்டுள்ளார். வீரர்கள், ரசிகர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டே, ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான சூழல் உருவானபின்பே இந்த தொடர் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.