துவக்க விழா ரத்து
பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஐபிஎல் துவக்க விழாவை ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டிக்கு முன் துவக்க விழா
கடந்த வாரம் வெளியான 2019 ஐபிஎல் தொடருக்கான அட்டவணையில் மார்ச் 23ஆம் தேதி முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாக துவக்க விழா நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
துவக்க விழா ரசிகர்கள்
ஐபிஎல் துவக்க விழா எப்போதும் கோலாகலமாக நடைபெறும். அதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு. ஆனால், இந்த முறை உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் துவக்க விழா நடைபெறாது.
ஐசிசி-க்கு கடிதம்
மேலும், பிசிசிஐ கூட்டத்தில் ஐசிசிக்கு கடிதம் எழுதி, தீவிரவாதத்தை வளர்க்கும் நாடுகளுடன் இனி கிரிக்கெட் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்த உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டும் என கேட்க உள்ளதாகவும் பிசிசிஐ கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
போட்டி நடக்குமா?
ஆனால், உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கக் கூடாது என பலரும் கூறி வரும் நிலையில், அது பற்றி பிசிசிஐ எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்த விஷயத்தில் இந்திய அணியின் மனநிலையை தெரிந்து கொள்ள கேப்டன் கோலி, மூத்த வீரர் தோனி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐ பேச உள்ளதாக தெரிகிறது.