தொடக்கமே ஷாக்
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 3 ரன்களுக்கு அவுட்டாகி நடையை கட்டினார். ஜாஸ் பட்லரும் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக இல்லாததால், அந்த அணியை யார் காப்பாற்றுவது என்ற சிக்கல் உருவானது. ஆனால் அப்போது தான் தனது கேப்டன் இன்னிங்ஸ் மூலம் கம்பேக் கொடுத்தார் சஞ்சு சாம்சன்.
சஞ்சு சாம்சனின் ஆக்ரோஷம்
3வது ஓவரில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி வியப்பை ஏற்படுத்தினார். எப்போதும், தொடக்கத்தில் நிதானம் காட்டும் சஞ்சு சாம்சன், இன்று திடீரென முதல் பந்து முதலே அதிரடி காட்டினார். இதன் விளைவு 13 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் சேர்ந்தது. இவரின் ஆட்டத்தை பார்த்து அதிரடி நாயகன் ஜாஸ் பட்லரே நிதானமாக பார்ட்னர்ஷிப் தர ஆரம்பித்தார்.
திணறிய குஜராத்
தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சனை சமாளிக்க முடியாமல் குஜராத் பவுலர்கள் விழிப்பிதுங்கினர். இறுதியில் சாய் கிஷோர் வீசிய பந்தில் சிக்கினார். மொத்தமாக 26 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 47 ரன்களை குவித்தார். மிகவேகமாக ரன்கள் உயர்ந்துவிட்டது. மேலும் ஐபிஎல் 2022ல் 400 ரன்களையும் கடந்தார்.
முக்கிய காரணம்
சஞ்சு சாம்சனின் இந்த ஆக்ரோஷத்துக்கு பின்னர் முக்கிய காரணம் உண்டு. அதாவது தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரர்கள் இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கெல்லாம் வாய்ப்பு தந்தனர். ஆனால் நல்ல ஃபார்மில் உள்ள சஞ்சு சாம்சன் மட்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.
பிசிசிஐ-ன் துரோகம்
சஞ்சு சாம்சனுக்கு ஏற்கனவே தொடர்ச்சியான வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் முறையாக இந்திய டி20 அணிக்காக அறிமுகமானார். இதுவரை 12 போட்டியில் தான் ஆடியுள்ளார். ஆனால் இந்த 12 போட்டிகளில் ஒவ்வொன்றும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொடுக்கப்பட்டவை. பிசிசிஐ மீதான இந்த கோபத்தை தான் இன்று அப்படி வெளிப்படுத்தியுள்ளார்.