சிஎஸ்கே நிலவரம்
இந்நிலையில் அனைத்து அணிகளும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பட்டியல் தனி கவனம் ஈர்த்துள்ளது. அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் எம்.எஸ்.தோனி தான் இருப்பார் என உரிமையாளர் காசி விஸ்வநாதன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் தோனிக்கு ரூ.16 கோடி ஊதியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று திடீர் ட்விஸ்டாக தோனி 2வது வீரராக தக்கவைக்கப்பட்டு ரூ.12 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரின் வயது காரணமாக பார்க்கப்படுகிறது.
2வது தேர்வு
தோனியின் இடத்தில் முதன்மை வீரராக சீனியர் ஆல்ரவுண்டர் ஜடேஜா அணியில் தக்கவைக்கப்பட்டார். கடந்த சீசனில் ஜடேஜாவின் பவுலிங்கை போன்றே பேட்டிங்கும் அற்புதமாக இருந்ததால், அவரை அணியில் இருந்து கழட்டிவிட முடிவெடுக்கவில்லை. அவருக்கு ரூ. 16 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த சிஎஸ்கே கேப்டனாக கூட செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
அயல்நாட்டு வீரர்
அணியில் குறைந்தபட்சம் ஒரு அயல்நாட்டு வீரர் தேர்வில் முதலில் ஃபாப் டூப்ளசிஸ் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கான ஊதியத்தில் உடன்பாடு எட்டப்படாததால் அவருக்கு மாற்றாக மொயீன் அலியை 3வது தேர்வாக சிஎஸ்கே தக்கவைக்க முடிவெடுத்துள்ளது. அவருக்கு ஊதியமாக ரூ.8 கோடி தரப்படவுள்ளது.
சுரேஷ் ரெய்னா இல்லை
இந்தபட்டியலில் 4வது வீரராகவாவது மற்றொரு சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது சிஎஸ்கே. தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டை 4வது வீரராக தக்கவைத்துள்ளது. அவருக்கான ஊதியமாக ரூ. 6 கோடி நிர்ணயிக்கப்படும்.
சிஎஸ்கேவிடம் மீதமுள்ள தொகை
இந்தாண்டு மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.90 கோடி வரை செலவு செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டதால் சிஎஸ்கே ஏற்கனவே ரூ.42 கோடியை செலவு செய்துவிட்டது. மீதமுள்ள ரூ.48 கோடியை வைத்துதான் சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளது.