யார் இந்த மோரிஸ்
தென்னாப்பிரிக்கா அணிக்காக கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமான கிறிஸ் மோரிஸ் கடந்த 8 வருடங்களாக 3 வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 69 போட்டிகளில் விளையாடியுள்ள மோரிஸ் 774 ரன்களை குவித்துள்ளார். இதே போல வேகப்பந்துவீச்சாளரான மோரிஸ் 94 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரின் சர்வதேச போட்டிகள் குறைவாக இருந்தாலும் ஐபிஎல்-ல் இவருக்கான மவுசு அதிகம் தான்.
அதிக மதிப்பு
2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அனைத்து அணிகளும் இவரை வாங்க போட்டிப் போட்டன. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ.16.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை மோரிஸ் பெற்றார். 2022ம் ஆண்டிலும் அவருக்கு அதிக மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓய்வை அறிவித்துள்ளார்.
மோரிஸின் விளக்கம்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். என்னுடன் அதிக போட்டிகளில் பயணித்தவர்களாக இருந்தாலும் சரி குறைந்த போட்டிகளில் பயணித்தவர்களாக இருந்தாலும் நன்றி. எனது வாழ்வின் மிக அழகான நாட்களாக இருந்தன. அனைவருக்கும் நன்றி எனக்கூறியுள்ளார்.
அடுத்த திட்டம்
தனது ஓய்வு அறிவிப்பின் போதே தனது அடுத்தகட்ட திட்டம் குறித்தும் மோரிஸ் அறிவித்துள்ளார். அதாவது தென்னாப்பிரிக்காவில் உள்ள உள்நாட்டு கிரிக்கெட் அணியான டைட்டான்ஸுக்கு பவுலிங் பயிற்சியாளராக செயல்பட போவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் இவருக்கு பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் ரெக்கார்ட்
34 வயதாகும் கிறிஸ் மோரிஸ் இதுவரை 81 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 618 ரன்களை அடித்துள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரையில் 95 விக்கெட்களை சாய்த்துள்ளார். முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுப்பதில் மிகவும் திறமையானவர் மோரிஸ். கடந்தாண்டு மட்டும் 11 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்து, தான் அதிக தொகைக்கு தகுதியானவர் என நிரூபித்தார்.