மூன்று வீரர்கள் கைது
கடந்த ஆண்டு மே 16-ந் தேதியன்று ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மூவரும் உடனே சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
மே 23-ல் மெய்யப்பனுக்கு சம்மன்
விண்டூ மூலமாக பிக்ஸிங் புக்கிகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியும் கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகனுமாகிய குருநாத் மெய்யப்பனுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியது.
மெய்யப்பன் கைது
இதைத் தொடர்ந்து மே 24-ந் தேதி மும்பை போலீசில் ஆஜரான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். அதுவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி உரிமையாளராக அறியப்பட்ட குருநாத் மெய்யப்பன், திடீரென கவுரவ உறுப்பினராக கூறப்பட்டார்.
சீனிவாசன் 'ஒதுங்கல்'
பின்னர் ஜூன் 2-ந் தேதி நடைபெற்ற கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் பிக்ஸிங் விசாரணை குறித்து ஓய்வுபெற்ற இரு நீதிபதிகள் விசாரணை நடத்துவர் என்றும் அதுவரை சீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து "ஒதுங்கி" இருப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டது.
ராஜ்குந்த்ரா ஒப்புதல்
பின்னர் ஜூன் 6-ந் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா, பெட்டிங்கில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார் என்று டெல்லி போலீஸ் தெரிவித்தது. அதனால் குந்த்ரா சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
ஸ்ரீசாந்துக்கு ஜாமீன்
பின்னர் ஸ்ரீசாந்த், சவானுக்கு ஜாமீன் கிடைத்தது. அதே நேரத்தில் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இருநபர் அறிக்கை
கிரிக்கெட் வாரியம் நியமித்த இருநபர் கமிஷன், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்தியா சிமெண்ட்ஸ் ஆகியவற்றுக்கும் பிக்ஸிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியது. சீனிவாசன் தலைவராக நீடிக்கலாம் என்றும் அந்த கமிஷன் கூறியது.
மும்பையில் வழக்கு
கிரிக்கெட் வாரியத்தின் இருநபர் கமிஷனுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜூலை 30-ந் தேதியன்று கிர்க்கெட் வாரியத்தின் இருநபர் கமிஷன் அரசியல் சட்டவிரோதமானது என்று மும்பை கோர்ட் தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில்..
மும்பை நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகஸ்ட் 5-ந் தேதி மனுத்தாக்கல் செய்தது.
சீனிக்கு அனுமதி
பின்னர் கிரிக்கெட் வாரியத் தேர்தலில் சீனிவாசன் போட்டியிடலாம்.. ஆனால் பதவி ஏற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி செப்டம்பர் 29-ல் உத்தரவு பிறப்பித்தது.
முத்கல் கமிட்டி
இதைத் தொடர்ந்து பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்த முத்கல் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்தது.
அறிக்கை தாக்கல்
முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி 10-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
மெய்யப்பனுக்கு தொடர்பு
கடந்த மார்ச் 7-ந் தேதி கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மெய்யப்பனுக்கும் அதிகாரப்பூர்வமாக தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சீனிக்கு வார்னிங்..
பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று நேற்று முன்தினம் மார்ச் 25-ந் தேதியன்று உச்சநீதிமன்றம் கூறியது.
அதிரடி பரிந்துரைகள்
இன்று நடைபெற்ற விசாரணையில் கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவராக கவாஸ்கர் நியமிக்கப்பட வேண்டும், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளைத் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.