கூட்டம் கூட கூடாது
இந்த நிலையில் இந்தியாவில் மக்கள் பொது இடங்களில் கூட கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்களை ரத்து செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பாக நடத்தப்படும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஹோலி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் சந்தேகம்
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டி நடக்குமா என்பது சந்தேகம் ஆகியுள்ளது. ஐபிஎல் 2020 தொடர் இந்த மாதம் இறுதியில் 28ம் தேதி தொடங்க உள்ளது. பொதுவாக ஒரு போட்டியை காண 30-40 ஆயிரம் பேர் வருவார்கள். கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் இப்படி பலர் ஒரே இடத்தில் இருப்பது பெரிய ரிஸ்க். மக்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஐபிஎல் திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகம்தான்.
கங்குலி என்ன சொன்னார்
ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் போட்டி கண்டிப்பாக நடக்க வாய்ப்புள்ளது. தேதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. கண்டிப்பாக திட்டமிட்டபடி 28ம் தேதி போட்டிகள் துவங்கும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கங்குலி முடிவு எடுத்தால் மட்டும் இப்படி போட்டியை நடத்த முடியாது என்கிறார்கள். இதற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்க வேண்டும்.
மீட்டிங் நடக்கும்
தற்போது கொரோனா காரணமாக முக்கியமான முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்கும். கிரிக்கெட் போட்டிக்காக மக்களின் உயிரோடு விளையாட முடியாது. அதேபோல் கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பாதுகாப்பு கிடையாது. ஆகவே இது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் மீட்டிங் நடக்கும் என்கிறார்கள். மத்திய அரசு மற்றும் பிசிசிஐ தலைவர்கள் இடையே இந்த கூட்டம் நடக்கும்.
முடிவு செய்வார்கள்
இந்த கூட்டத்தில்தான் ஐபிஎல் 2020 குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். மக்களின் பாதுகாப்பு கருதியும், வெளிநாட்டு வீரர்களின் நிலை கருதியும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு, வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படும். ஐபிஎல் போட்டிக்காக இப்போது சென்னை அணி தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் போட்டி நடப்பதே சந்தேகமாக இருக்கிறது.